See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மே 12, 2008

சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green, அக்டோபர் 10, 1822 - மே 28, 1884) என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார்.


இரட்டைத்திமில் ஒட்டகம் (Camelus bactrianus) என்பது இரட்டைத் திமில் கொண்ட, ஈடான சுமை தாங்கும் இரட்டைக் குளம்பு கொண்ட பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒட்டகம். இவை சீனாவின் வடக்கேயும், மங்கோலியாவிலும் உள்ள கோபி பாலைநிலப்பகுதியில் வாழ்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, கிரேக்க மொழியில் பாக்ட்ரியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் கி.மு 2500 ஆண்டளவில் இந்த இரட்டைத் திமில் ஒட்டகம் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டது (கொல்லைப்படுத்தப்பட்டது) என்று நினைப்பதால், இதனை பாக்ட்ரிய ஒட்டகம் என்றும் அழைப்பர். பெரும்பாலும் கானப்படும் ஒற்றைத்திமில் ஒட்டகம் கி.மு 4000 ஆண்டளவில் வளர்ப்பு விலங்காக ஆனது என்று கருதப்படுகின்றது.


மே 8, 2008

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி (1869-1948) என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "சுதந்திர இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.


கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail), இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை. தற்போது, சுமார் 3 ஆண்டுகளாகச் சோதனையில் இருந்த இந்த மென்பொருள், சோதனைகள் முடிவைந்து வெளிவந்துள்ளது. இச்சேவை ஐக்கிய இராச்சியத்திலும், ஜெர்மனியிலும் கூகிள்மெயில் என அறியப்படுகின்றது. இது முன்னானியில் யாகூ! மெயில், வின்டோஸ் லைவ் மெயில் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது. ஜிமெயிலானது அழைப்புக்களின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துஇல் ஆகஸ்டு 9, 2006[1] இல் இருந்தும் ஜப்பானில் ஆகஸ்டு 23[2] , 2006 இலிருந்தும் எகிப்தில் டிசம்பர் 5[3], 2006 இருந்தும் ரஷ்யாவில் டிசம்பர் 16, 2006 [4]முதல் இணையமுடியும்.


ஏப்ரல் 30, 2008

இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.


சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு. அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.


ஏப்ரல் 20, 2008

இயற்பியலில், முறுக்கு விசை (திருப்புத்திறன் என்றும் சிலசமயம் அறியப்படும், அஃதாவது ஒரு விசையின் திருப்புத்திறன்) என்பதை கோண விசை அல்லது வளைவு விசை என்றும் வருனிக்கலாம். அஃதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு).

இஃது, நேர்விசை மற்றும் ஒரு ஆரத்தின் (நெறிமப்) பெருக்கல் என வரையறுக்கப்படும். முறுக்கு விசையின் S.I அலகு நியூட்டன்.மீட்டர் (N.m) ஆகும். முறுக்கு விசை τ(டவ்) என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது.


எட்டயபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.


ஏப்ரல் 15, 2008

கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயங்கு முறைகளைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ். (MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயங்கு முறைகளுடன் கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி விற்பன்னர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர்.


மலையாள ழகரம்
மலையாள ழகரம்

மலையாளம் தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.


ஏப்ரல் 8, 2008

புவி வெப்பநிலை அதிகரிப்பு (Global warming) என்பது காலப்போக்கில் புவியின் காற்று மண்டலம் மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும்.

பெரும்பாலும் மனிதர்களின் செயற்பாடுகளினால் கடந்த 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தற்போது வரை புவியின் சராசரி வெப்பநிலை 0.6 ± 0.2 செல்சியஸ் அளவு வரை கூடுதலாகியிருக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


புவியின் வெப்பநிலைக்கும் கரியமிலத்திற்கும் உள்ள தொடர்பு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானது பனிப்பாறைகள் மீதான ஆராய்ச்சி. பல இலட்சம் ஆண்டுகள் முன்னிலிருந்து இன்று வரை வளிமண்டலத்தில் கரியமிலத்தின் அளவையும், அதே சமயத்தில் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் பனிக்கட்டி படிவுகளை பயன்படுத்துகிறார்கள். அண்டார்டிகா, ஆர்க்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனிப்பாளங்கள் பல இலட்சம் ஆண்டுகளாக உருவாகி வருகின்றன. இப்பாளங்களின் ஓவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தை சார்ந்ததாக இருக்கும். இப்பனி அடுக்குகள் அந்த சமயத்தில் நிலவி வந்த கற்றுக்குமிழ்களையும் உள்ளடக்கியிருக்கும். இக்காற்றுக் குமிழ்களை ஆராய்வதன் மூலம் அக்கால கட்டத்தில் வளிமண்டலத்தில் எவ்வளவு கரியமிலம் இருந்தது என்பதை அறியலாம். அதேபோல ஹைட்ரஜன் / ஆக்சிஜன் சமதானி (isotope) களை தீர்மானித்து அதன் மூலம் அக்காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்கலாம்.


பௌத்தத்தில் புத்தத்தன்மை (சமஸ்கிருதம்:புத்தத்துவம், பாளி:புத்தத்த, அல்லது (இரண்டிலும்) புத்தபாவம்) என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இந்நிலையினை அடைந்த ஒருவரை புத்தர் என அழைப்பர்.

பாளி சூத்திரங்களிலும் மற்றும் தேரவாதத்திலும், புத்தர் என்ற சொல், எவருடைய உபதேசத்தினையும் பெறாமல் சுயமாக போதியினை உணர்ந்தவர்களே புத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் போதனையினால் போதியினை உணர்ந்தவர்கள் அருகன் என அழைக்கப்படுகின்றனர். இந்த பெயர் புத்தர்களும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏப்ரல் 2, 2008

கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும், கிழக்கே அட்லாந்திக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.


கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.


யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. படத்தில் பனம் பணியாரம் காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன.


மார்ச் 24, 2008
A என்னும் கணம் B யின் உட்கணம்

கணிதத்தில், கணம் அல்லது தொடை என்பது பல்வேறு பொருள்களின் திரட்டு அல்லது தொகை ஆகும். இது மிகவும் எளிய கருத்தாகத் தோன்றினாலும், கணிதத்தின் ஓர் ஆழம் உடைய அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்றாக இது விளங்குகிறது. கணம் அல்லது தொடை என்பதில் உள்ள பொருட்களை உறுப்புகள் என்பர். எடுத்துக்காட்டாக 4, 7, 9 ஆகிய எண்களை ஒரு தொகுதியாகக் கொண்டு அதனை C என்னும் பெயர் கொண்ட ஒரு கணமாகக் கொண்டால், C யின் உறுப்புகள் 4, 7, 9 என்பன ஆகும். ஒரு கணத்தின் உறுப்புகளை நெளிந்த அடைப்புக் குறிகளுக்கு இடையே குறிப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக C என்னும் கணத்தை C = {4, 7, 9} என்று குறிப்பர். கணத்தில் அளவிடக்கூடிய எண்ணிக்கையுடைய உறுப்புகள் இருப்பவையும் உண்டு, அளவிட இயலா எண்ணிக்கை உடைய உறுப்புகள் கொண்ட கணங்களும் உண்டு. ஒல்லத்தக்க (இயலக்கூடிய) கணங்களின் அமைப்புகளையும் தொடர்புகளையும் பற்றிய கோட்பாடுகளுக்கு கணக் கோட்பாடு என்று பெயர். இத்துறை மிகவும் வளமையானது.


பறவைகள், இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். உலகில் அண்ணளவாக 9000 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.


மார்ச் 16, 2008

பொனொபோ எனப்படும் மனித குரங்குகள் அண்மை காலம் வரை குறள சிம்ப்பன்சி அல்லது குட்டிச் சிம்ப்பன்சி (Pygmy Chimpanzee) என்று அழைக்கப்பட்டது. இவை சிம்ப்பன்சி இன குரங்குகளின் இரு பிரிவுகளில் ஒன்றாகும். "சிம்ப்பன்சி" என்ற பெயர் பொதுவான சிம்ப்பன்சி (Common Chimpanzee), மற்றும் பொனொபோ இரண்டையும் குறித்தாலும் வழக்கமாக அழைக்கப்படும் பொதுவான சிம்ப்பன்சியையே குறிக்கும். பொனொபோக்கள் தற்போது அழிவுநிலையில் உள்ளன. அவைகள் இயற்கையில் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள காடுகளிலேயே காணப்படுகின்றன்.


சுடோக்கு என்பது சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு சதுரத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பு பொருந்துமாறு, எண்களை அமைத்து விளையாடும் புதிர் கணக்கு வகையான விளையாட்டு ஆகும். சுடோக்கு என்றால் சப்பானிய மொழியில் எண்-இடம் என்றும் பொருள். மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது சிறு கட்டங்களை ஒரு சதுரமான அறையாக அமைத்து, பிறகு இப்படிப்பட்ட அறைகளை மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது அறைகளாக சதுரமாக அமைக்க வேண்டும். இப்படி ஒன்பது அறைகள் கொண்டது ஒரு சட்டகம். இந்த சட்டகத்திலே ஒவ்வொரு வரிசையிலும் 9 சிறு கட்டங்கள் இருக்கும் (3 வெவ்வேறு அறைகளைச்சேர்ந்த கட்டங்கள் இவை), இப்படியாக ஒன்றன் கீழ் ஒன்றாக 9 வரிசைகள் இருக்கும். கிடையாக கட்டங்கள் அமைக்கப்பட்ட வரிசையைக் கிடை என்றும், மேலிருந்து கீழாக ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்படுள்ள கட்டங்களை நெடை என்றும் பெயர். இந்த புதிர் கணக்கு வகையான சுடோக்குவில் ஒவ்வொரு சிறு கட்டத்திலும் 1 முதல் 9 வரையுள்ள ஒன்பது எண்களில் ஏதாவது ஒன்று மட்டுமே இருக்க வேண்டும். இந்த புதிர் கணக்கு சுடோக்கு விளையாட்டு தொடங்கும் முன் சில கட்டங்களில் மட்டும் ஏற்கனவே சில எண்கள் கொடுத்திருப்பார்கள். இவை கொடுக்கப்பட்ட எண்கள் எனப்படும். மீதம் உள்ள சிறு கட்டங்களில் குறிப்பிட்ட விதிகளின் படி எண்களை பதிக்க வேண்டும்.


மார்ச் 9, 2008

பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் மர இனமாகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.

பலா எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.


இடவியல் (Topology) கணிதத்தின் ஒரு பெரிய உட்துறை. அடிப்படைக் கணித அமைப்புகளுக்குக் குந்தகமில்லாமல் வடிவவியல் முறையிலோ அல்லது இயற்கணித முறையிலோ செய்யப்படும் உரு மாற்றங்களைப் பற்றி இத்துறை விபரிக்கின்றது.

முக்கியமாக 1736 இல் ஆய்லர், 1895 இல் புவான்காரே, 1906 இல் ஃபிரெஷெ, 1914 இல் ஹௌஸ்டார்ஃப், 1922 இல் குரடோவ்ஸ்கி ஆகியவர்களும் இன்னும் சிலரும் செய்த ஆய்வுகளும் தொகுப்புகளும் சேர்ந்து இத்துறை உருவாகியது. அதிலிருந்து ஓர் ஐந்தாறு பத்தாண்டுகளுக்கு இத்துறைதான் கணித உலகெங்கும் ஆய்வாளர்களால் வேண்டப்பட்ட துறையாக இருந்தது. காலப்போக்கில் அதனுள்ளேயே இரண்டு உட்துறைகளாகப் பிரிந்து விரிந்துள்ளது: அதாவது, கணக்கோட்பாட்டு இடவியல், இயற்கணித இடவியல். முந்தியது பொதுவாக இடவியல் வெளிகளைப் பற்றியும், பிந்தியது இடவியல் உரு மாற்றங்களினால் மாற்றமுறா சிறப்பியல்புகளைப் பற்றியும் பேசுகின்றன.


மார்ச் 2, 2008

பொறியியல்என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல் (materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொரியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். .

பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், படிம எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுப்பிளவு போன்றவை.


சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.


பெப்ரவரி 23

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. கொடும் விலங்குகளான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.


ஃபிபனாச்சி எண்கள் (Fibonacci numbers) என்பவை கணிதத்தில் பரிச்சயமில்லாதவர்களையும் ஈர்க்கும் ஒரு சுவையான கணிதப்பொருள்.

வடமொழியில் 'சந்தஸ் சாஸ்திரம்' (சீர் இயல்) என்று பிங்களர் கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதிய நூலில் 'மாத்ரா மேரு' என்ற பெயரில் இந்த எண்கள் பற்றி முதன் முதல் பேசப்பட்டது. 6ஆம் நூற்றாண்டில் விரஹங்கர் எழுதிய யாப்பிலக்கண நூல்களில் மறுபடியும் பேசப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் ஹேமசந்திரர் என்பவருடைய நூலிலும் விரஹங்கர் நூலுக்கு கோபாலர் எழுதிய உரைநூலிலும் இது விபரமாகப் பேசப்படுகிறது.

மேற்கத்திய வரலாற்றில் லியனார்டோ டா வின்சி (அவருடைய இன்னொரு பெயர் ஃபிபனாச்சி) எழுதிய "லிபர் அபேஸி" (1202) என்ற இலத்தீன் நூலில் முதன் முதல் பேசப்பட்டு இன்றும் பல அறிவியல் துறைகளிலும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கும் பொருள் இது.


ஜனவர் 31

இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது.

நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வர்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.


ஓட்டன் சமவெளி இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசியப் வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டயார் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது. 1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாகக் காணப்பட்ட ஓட்டன் சமவெளி 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும். இச்சமவெளி அயனமண்டல மழைக்காடுகளாலும் ஈரப்பதனப் புல் நிலங்களாலும் ஆனது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும்.


ஜனவரி 5

பொங்கல் தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்துக்கும் இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும் உள்ளது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.


ஹாசன் (ஆங்கிலம்: Hassan, கன்னடம்: ಹಾಸನ) இந்திய மாநிலமான கர்நாடகாவின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ஹாசன் சிட்டி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆட்சி செய்த ஹோய்சாலப் பேரரசின் முக்கிய மாகாணமாக விளங்கியது ஹாசன். ஹாசனிலுள்ள ஹோய்சாலர் கட்டிடக்கலை உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாசன் இன்று நவீன தொழில்நுட்பத்திலும் முன்னேறிவருகிறது. இந்திய வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைமைக் கட்டுப்பாட்டு மையம் (Master Control Facility) இங்கு அமைந்துள்ளது.


ஹாசன் மாவட்டத்தின் வரலாறு, கர்நாடகத்தை ஆண்ட இரண்டு பேரரசுகளான மேற்குக் கங்கப் பேரரசு (350 - 999 கி.பி) மற்றும் ஹொய்சால பேரரசுடனும் (1000 - 1334 கி.பி) தொடர்புடையது. பின்பு 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசை ஆண்ட விஜயநகர அரசர்கள் பேளூரிலுள்ள சென்னகேசவ பெருமாளைக் குலத்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக அந்நகரம் விஜயநகர அரசர்கள் ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் 17-18ஆம் நூற்றாண்டுகளில் ஹாசன் ஷிமொகாவின் கெலடி நாயகர்கள் மற்றும் மைசூர் பேரரசிற்கும் இடையே ஒரு சிக்கலுக்குரிய ஊராகவே இருந்தது. இவ்வூர் இறுதியில் மைசூர் பேரரசுடன் இணைந்தது.


டிசம்பர் 25

இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தின் காரணரும், மைய நபரும் ஆவார். இவர் ஏசு, கிறிஸ்து இயேசு, நாசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனாகிய இயேசு என்ற பெயர்களிலெல்லாம் அழைக்கப்படுகிறார். இஸ்லாம் மற்றும் பஹாய் நம்பிக்கை போன்ற சமயங்களிலும் இவர் ஒரு முக்கியமான தீர்க்கதரிசியாகக் கருதப்படுகிறார். இயேசு பற்றிய தகவல்கள் புனித விவிலியத்தின் நான்கு நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் மகன் என்றும், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (இரட்சகர்) என்றும் விசுவாசிக்கின்றனர். மேலும், சிலுவையில் மரித்த இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததாகவும், அவர் மூலமாக தாங்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட முடியும் என்றும் நம்புகின்றனர். வரலாற்று ஆய்வாளரின் கருத்துப்படி இயேசு கி.மு. 8–2 தொடக்கம் கி.பி. 29–36 வரை பூமியில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர்.


காவிரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு புறநகர், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.


மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பில்லிகுண்டுவை தாண்டி ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறு கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.


டிசம்பர் 11


தெலுங்கு, தெலுங்கு திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசத்தில் அரசு ஏற்புபெற்ற இம்மொழி இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்றாகும். தெலுங்கு தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 17வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 8 கோடியே 30 இலட்சம் (83 மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் தெலுங்கு ஆகும்.


தெலுங்கு திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி. மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப்போல் அல்லாது, தெலுங்கு மொழி சமசுகிருதத்தில் இருந்து தோன்றவில்லை. இந்தியாவில் ஆரியமொழி இந்தியாவில் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் திராவிட மொழி பேசப்பட்டு வந்தது என நம்பப்படுகிறது. முழுவதுமாக நிறுவப்படாது இருப்பினும், சிந்து சமவெளி நாகரீகம் திராவிட மொழி நாகரீகமாக இருப்பதற்கு அதிக அடிப்படை வாய்ப்புகள் உள்ளன.


நண்பர்களும் அன்னியர்களும் என்பதைப் பற்றிய கணிதத் தேற்றம் ராம்சே கோட்பாடு என்ற கணிதப் பிரிவைப் பாமரருக்கும் காண்பித்துக் கொடுக்கும் தேற்றமாகும்.


இத்தேற்றத்தைப் பற்றின மட்டில் இரு நபர்கள் இதற்கு முன் கை குலுக்கலோ அல்லது ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்தலோ செய்திருந்தால் அவர்களை நண்பர்கள் என்போம். இரு நபர்கள் நண்பர்களாக இல்லாவிட்டால் அவர்களை அன்னியர்கள் என்போம்.

இவ்வரையறையின் சிறப்பு என்னவென்றால், உலகத்திலுள்ள எந்த இரு நபர்களைக் காட்டினாலும் அவர்கள் நண்பர்களா அன்னியர்களா என்பதில் இப்பொழுது ஐயமே இருக்கமுடியாது. நமக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் நண்பர்களாகவோ அன்னியர்களாகவோ ஏதாவது ஒன்றாக இருந்துதான் ஆகவேண்டும். கணிதமரபின் துல்லியம் என்ற கட்டாயத்திற் குகந்த வரையறையிது.

ஆறு நபர்கள் ஒரு இடத்தில் காணப்படுகிறார்கள். அவர்களுக்குள் யார் யார் நண்பர்கள், யார் யார் அன்னியர்கள் என்பது தெரியாது. எப்படி யிருந்தாலும் அவர்களுக்குள் மூவராவது ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பார்கள்; அல்லது, மூவராவது ஒருவருக்கொருவர் அன்னியர்களாக இருப்பார்கள்.


டிசம்பர் 04
எடி மின்னோட்டம் (சுழல் மின்னோட்டம்)
எடி மின்னோட்டம் (சுழல் மின்னோட்டம்)

சுழல் மின்னோட்டம் (swirls or eddies) அல்லது எடி மின்னோட்டம் என்பது மின்காந்தத் தூண்டல் மூலம் பெறப்படும் ஒரு நிகழ்வாகும். மின்கடத்தி ஒன்று மாறும் காந்தப்புலத்தில் அதன் திசைக்குச் செங்குத்தாக நகரும் போது, அக்கடத்தியில் தூண்டப்படும் மூடிய சுழல் மின்னோட்டம் உருவாகும். இதனை ஃபோகால்ட் என்பவர் கண்டறிந்தார். இது ஃபோகால்ட் மின்னோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.


மாறுதிசை மின்னோட்டத்தை ஒரு கடத்தியினூடாகப் பாய விடும் போது, கடத்தியினுள்ளும் வெளியிலும் ஒரு காந்தப் புலம் உருவாகிறது. மின்னோட்டம் உச்ச நிலையை அடையும் போது காந்தப்புலம் ஏறு நிலையை அடைந்து, பின்னர் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புலமும் குறையும். வேறு ஒரு மின்கடத்தியை இந்த மாறும் காந்தப் புலத்துக்கு அருகில் காந்தப்புலத் திசைக்குச் செங்குத்தாகக் கொண்டு வரும் போது, இந்த இரண்டாவது கடத்தியில் ஒரு மின்னோட்டம் தூண்டப்படுகிறது. ஃபிளமிங்கின் வலக்கை விதிப்படி, காந்தப்புலத்தின் திசைக்குச் செங்குத்தாக இம்மின்னோட்டம் பாய்வதால், இவை உள்ளகத்தின் அச்சை மையமாகக் கொண்ட வட்டப் பாதையில் அமைகின்றன. இதற்காகவே இதனை சுழல் மின்னோட்டம் என அழைப்பர்.


இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் ஆதியான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது [1][2]. பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.


பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.


நவம்பர் 29
தூரயா செல்பேசி பாவிக்ககூடிய இடங்கள்
தூரயா செல்பேசி பாவிக்ககூடிய இடங்கள்

தூரயா (Thuraya) என்பது பூமி சார்பு செய்மதிகள் இரண்டின் மூலம் இயங்கும் செய்மதித் தொலைபேசியாகும். இது ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளை முதன்மையாகக் கருத்திற் கொண்டு நிலையாக இயங்கும் ஒரேயொரு பூமி சார்பு தொலைத் தொடர்பாடல் செயற்கைக்கோள் ஆகும். இன்னும் ஓரு செயற்கைக்கோள் பின்னணியில் இயங்குகின்றது. மேலும் ஒரு செயற்கைக்கோளை 2007 நவம்பர் 21 இல் ஏவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் இறுதியில் தூரகிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இருந்தும் இந்த வலையமைப்பை அணுகுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.


மார்ச் 2006 இன்படி 250,000 வாடிக்கையாளர்களை தூரயா கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இருந்து 360,000 தொலைத்தொடர்பாடல் கருவிகளை விற்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் ஏப்ரல் 15, 1997 இல் தொடங்கப்பட்டது. இது பல்வேறு சேவை வழங்கும் உரிமைகளை வேறு பல நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது.


மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது கேள்விக்குரியதே. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு, லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.


இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலைப் பொதுவாக 4 பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கிறது. இந்நூலின் முதன்மை நோக்கம் நாசரேத்தூர் இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை வலியுறுத்துவதாகும். மேலும் இந்நூல், இயேசு பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவு செய்ய வந்தார் என்பதை முன்னிறுத்துகிறது. இதற்காக குறைந்தது 65 சூழல்களில் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறது.


நவம்பர் 19

மஞ்சுஸ்ரீ (சீனம்: 文殊 Wénshū or 文殊師利菩薩 Wénshūshili Púsà; ஜப்.: மோஞ்சு; திபெத்: ஜம்பெல்யாங்;), அறிவாற்றலின் (பிரக்ஞை) போதிசத்துவர் ஆவார். சாக்கியமுனி புத்தரின் சீடரான இவர், அறிவு, புத்திக்கூர்மை மற்றும் மனத்தெளிவு முதலியவற்றின் வெளிப்பாடாக உள்ளார். அவலோகிதருக்கு அடுத்து மிகவும் புகழ் பெற்ற போதிசத்துவர் மஞ்சுஸ்ரீ ஆவார். இவருடையாக இணையாக சரசுவதி கருதப்படுகிறார்.

ஜப்பானில் மஞ்சுஸ்ரீ, சாக்கியமுனி மற்றும் சமந்தபத்திரர் ஸான்ஃஸோன் ஷாகா என்ற மும்மூர்த்தியாக உள்ளனர். மஞ்சுஸ்ரீ எட்டு அறிவாற்றலின் போதிசத்துவர்களுள் (எட்டு அறிவுணர்வு(பிரக்ஞா) போதிசத்துவர்களுள்) ஒருவர் ஆவார். மேலும் ஜப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களுள் ஒருவர். திபெத்திய பௌத்தத்தில் இவர், அவலோகிதர் மற்றும் வச்சிரபாணியுடன் மும்மூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.


100px100px

ரெக்காவின் நெருப்பு (ஃப்ளேம் ஆஃப் ரெக்கா) (烈火の炎 ரெக்கா நொ ஹோனோ?) என்பது நொபுயுகி அன்ஸாய் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு மங்கா தொடர். இதனுடைய தொலைக்காட்சி தழுவலாக இதே பெயரில் ஒரு அனிமே தொடரையும் உருவாக்கினர். இந்த மங்கா "ஷோனென் சண்டே" என்ற இதழில் 18 அக்டோபர் முதல் 18 ஏப்ரல் 2002 வரை 33 அத்தியாயங்களாக வெளி வந்தது. இத்தொடரை தழுவி இரண்டு வீடியோ கேம்களை கேம்பாய் அட்வான்ஸ் நிறுவனம் விறபனையில் விட்டுள்ளது.

ரெக்காவின் நெருப்பு என்ற இத்தொடர், ""ரெக்கா ஹானிபீஷீ" என்ற இளைஞனின் வாழ்க்கையை ஒட்டியது. இவன் தன்னை வீழ்த்துபவர்களுக்கு நிஞ்சாவாக இருப்பதாக அறிவித்ததால், அவ்வப்போது சகவயதினரிடன் எப்போதும் சண்டையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பான். இருப்பினும், யனாகி சகோஷிடா என்ற பெண்ணிடம் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் அவளுக்கு காலம் முழுவதும் நிஞ்சாவாக இருப்பதாக வாக்குறுதி அளிக்கிறான். யனாகி சகோஷிடா குணப்படுத்தும் ஆற்றலுள்ள ஒரு பெண், மேலும் கருணையும் அன்பும் நிரம்பியவள். இதற்கு இடையில், காகே ஹோஷி என்கிற மாயப்பெண் ரெக்காவின் வாழ்வில் புகுகிறாள். வெகு விரைவில் தனக்குள் நெருப்பைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளதை உணருகிறான் ரெக்கா. மேலும் அவன் 400 ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட, ஹொக்காகே நிஞ்சா இனத்தவரின் ஆறாம் தலைமுறை தலைவரின் ம்கன் என்பதையும், மாய ஆயுதங்களான மடோகுவை குறித்தும் அறிகிறான். இந்நிலையில் மோரியும், குரேயும் யனாகியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கின்றனர். அதற்காக பல்வேறு மடோகுகளை உபயோகிப்பவர்களை ரெக்காவுக்கு எதிராக ஏவுகின்றனர். ரெக்காவும் அவனது நண்பர்களும் தங்களது மடோகுகளையும் நெருப்பு டிராகன்களையும் வைத்துக்கொண்டு மோரியிடத்திலிருந்து எவ்வாறு யனாகியை காப்பாற்றுகின்றனர் என்பது தான் கதை. அதே நேரத்தில் ரெக்கா தனது தாயின் சாபத்தையும் தீர்க்க வேண்டும்.


நவம்பர் 05

சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். 1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார். 1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம்பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்த்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவாத்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டுள்ளது.


காட்டீசியன் ஆள்கூற்று முறைமை.
காட்டீசியன் ஆள்கூற்று முறைமை.

கணிதவியலில், காட்டீசியன் ஆள்கூற்று முறைமை (Cartesian coordinate system) என்பது, இட வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் துல்லியமாய்க் குழப்பம் ஏதும் இன்றிக் குறிக்கப் பயன்படும் ஒரு முறை. எடுத்துக்காட்டாக ஒரு தளத்திலுள்ள புள்ளிகள் ஒவ்வொன்றையும் இரண்டு எண்கள் மூலமாக இம்முறைப்படி வேறுபடுத்திக் குறிக்கலாம். இந்த இரண்டு எண்களும் குறிப்பிட்டத் தொடக்கப் புள்ளியில் இருந்து அளந்தறியப்படும். இவை x- ஆள்கூறு, y- ஆள்கூறு என அழைக்கப்படுகின்றன. ஆள்கூறுகளைத் தீர்மானிப்பதற்காக ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு கோடுகள் வரையப்படுகின்றன இவைதான் ஒப்பீட்டுச் சட்டக் கோடுகள். இவை x- அச்சு, y- அச்சு எனப்படுகின்றன. x- அச்சைக் கிடை நிலையிலும், y- அச்சை நிலைக்குத்தாகவும் வரைவது மரபாகும். இக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டும் புள்ளி தொடக்கப்புள்ளி எனப்படும். இப்புள்ளியிலிருந்து தொடங்கி அச்சுக்கள் வழியே அருகிலுள்ள படத்தில் காட்டியபடி, அளவுகள் குறிக்கப்படுகின்றன.


அக்டோபர் 29

எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும் மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழிக்கப்பட்டன. ஈழப் போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும்.


சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.


அக்டோபர் 21
பிரகதீஸ்வரர் கோவிலில் இராஜராஜ சோழனின்  சிலை
பிரகதீஸ்வரர் கோவிலில் இராஜராஜ சோழனின் சிலை

சோழர்களின் புகழ் பெற்ற மன்னருள் முதலாம் இராஜராஜன் முதன்மையானவன். கி.பி 985 முதல் கி.பி 1012 வரை சோழ நாட்டைப் பெரும் புகழுடன் ஆட்சி புரிந்தவன் மாமன்னன் இராஜராஜன். இராஜராஜ சோழன் இடைக்கால சோழ மன்னர்களில் மிக உன்னதமானவன். இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.


பிரித்தானிய கன்னித் தீவுகள் கரிபியத்தில் போட்ட ரிக்கோவுக்கு கிழக்கில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது தீவுக் கூட்டத்திந் எஞ்சிய பகுதியில் அமெரிக்க வெர்ஜின் தீவுகள் அமைந்துள்ளது. பிரித்தானிய கன்னித் தீவுகளில் டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளும் மேலும் பல சிறிய தீவுகளும் மணல்மேடுகளும் காணப்படுகின்றன. இங்கு அண்ணளவாக 15 தீவுகளில் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. மண்டலத்தில் காணப்படும் மிகப்பெரிய தீவான டொர்டோலா சுமார் 20 கி.மீ. (சுமார் 12 மைல்) நீளமும் 5 கி.மீ.(சுமார் 3 மைல்) அகலமும் கொண்டதாகும். இம்மண்டலம் அண்ணளவாக 22,000 மக்களைக் கொண்டுள்ளது இதில் சுமார் 18,000 பேர் டொர்டோலாவில் வசிக்கின்றனர். மண்டலத்தின் தலைநகரான ரோட் டவுண் டொர்டோலா தீவில் அமைந்துள்ளது.


அக்டோபர் 14

பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில் வழங்கப்படினும், தொல்காப்பியத்தில் குறித்துள்ள படியும், இன்றைய தாவரவியல் அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும்.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.


கெரார்டு எர்ட்டில் (Gerhard Ertl) (பிறப்பு. அக்டோபர் 10 1936, பிறப்பிடம் ஸ்டுட்கார்ட்,ஜெர்மனி) ஜெர்மானிய நாட்டு இயல்பிய வேதியியல் அறிஞர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்றார். இவர் புகழ்பெற்ற மாக்ஸ் பிளாங்க் கெசெல்ஷாஃவ்ட்டின் ஃவிரிட்ஸ் ஹாபர் இன்ஸ்டியூட்டில் (Fritz-Haber-Institut der Max-Planck-Gesellschaft) ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர் ஆவார்.


அக்டோபர் 08

நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.

பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் தட்டுகளாக இருக்கின்றன. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு தட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது பன்னிரண்டு சிறிய தட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் தட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய பெருங்கடல் பகுதிகளும் அடக்கம்.


வள்ளுவர் கோட்டம், புகழ் பெற்ற திருக்குறள் என்னும் நூலைத் தமிழுக்குத் தந்த சங்ககாலத் தமிழ்ப் புலவரான திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது தமிழ் நாடு மாநிலத் தலைநகரமான சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு மற்றும் வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயிலில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை, ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.


செப்டெம்பர் 30

கோழி வளர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க தொழிற் துறையாகும். சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் நோய்க் காரணமாக கோழிவளர்ப்பு பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது.


கணிதத்தில் வரிசைமாற்றம், சேர்மானம் என்ற இரண்டு அடிப்படைக் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஒரு கணத்தின் உறுப்புக்களை ஒரு வரிசையில் வைத்து அவ்வரிசையை மாற்றி அமைத்தால் இம்ம்மாறுதல் ஒரு வரிசைமாற்றம் அல்லது வரிசை மாற்றல் எனப்படும். மாற்றிக்கிடைத்த வரிசைக்கும் வரிசைமாற்றம் என்றே பெயர். வரிசை என்ற கருத்தையே கொண்டு வராமல் கணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தால் இச்செயல் ஒரு சேர்வு எனப்படும். இச்செயலினால் கிடைக்கும் உட்கணத்திற்கும் சேர்வு என்றே பெயர். இவ்விரண்டு கருத்துக்களாகிற விதைகளிலிருந்து சிறுசிறு செடிகளாகப் பல வேறுபட்ட இடங்களில் வேரூன்றி முளைத்து 19ம் நூற்றாண்டில் பெரிய ஆலமரமாகப் பரவி அதன் விழுதுகள் புள்ளியியல், இயற்பியல், வேதியியல், இயலறிவியல்கள் எனப் பல அறிவியல் பிரிவுகளிலும் இன்றியமையாத கணிதக் கரணமாகப் பயன்படத் தொடங்கின. 20ம் நூற்றாண்டில் அவ்விழுதுகளும் எல்லா பயன்பாடுகளும் ஒன்றுசேர்க்கப்பட்டு இன்று கணிதத்தில் சேர்வியல் என்ற ஒரு மிகப்பெரிய பிரிவாகத் திகழ்கிறது. இக்கட்டுரையில் வரிசைமாற்றம் என்ற அடிக்கருத்தைப் பார்ப்போம்.


ஜூலை 25

எண் என்பது கணக்கிடப் பயன்படும் ஒரு அடிப்படையான நுண் கருத்துரு. கணிதத்துறையில் பலவகையான எண்கள் உள்ளன. மனிதன் தோன்றிய காலத்திலேயே அவன் கைவிரல்களை எண்ண எப்பொழுது தானே கற்றுக்கொண்டானோ அன்றே 'எண்' என்ற கருத்து உண்டானதாகக் கொள்ளலாம். எண்களின் கருத்து வளர்ச்சியே கணிதவியலின் தோன்றல்.

நடைமுறையில் மிகவும் பழக்கமான எண்கள், எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் இயற்கை எண்களாகும். இவைகளை இயல்பெண்கள் அல்லது இயலெண்கள் என்று குறிப்பிடலாம். இவை 0, 1, 2, ... என்பன. இவ்வெண் தொகுதி (அல்லது கணம்) \mathbf{N} என்னும் சிறப்பெழுத்தால் கணிதத்தில் குறிக்கப்படுகின்றது. இவற்றுடன் எதிர்ம எண்களையும் (-1, -2, -3, ...) சேர்த்து, முழு எண்கள் (integers) தொகுதி என அழைக்கப்படுகின்றது. இதன் குறியீடு \mathbf{Z}.


வட கொரியா கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. வடகொரியாவின் தொன்ம வரலாறு கொரிய வரலாற்றோடு பிணைந்தது. வடகொரியாவின் அண்மைக்கால வரலாற்றையே இந்தக் கட்டுரை விபரிக்கின்றது.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த கொரிய வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910 இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945 இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுக'ளான அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன.


மே 23

தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் பல அறுகோண அறைகள் கொண்ட, கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் வெளியிடும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன.


வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.


டிசம்பர் 15

கிறிஸ்துமஸ் ஆண்டு தோறும் நாசரேத்து இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகளும், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசு பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகுபடுத்துதல், கிறிஸ்துமஸ் கெரொல் பாடல் என்பன பொதுவாக அடங்கும். கிறிஸ்துமஸ் கிறிஸ்தவ கருத்துக்களோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால கொண்டாடங்களின் சில பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மதச் சார்பற்ற பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.


கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான அங்கமாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் ஏனைய கிறிஸ்துமஸ் அழகூட்டப் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அண்மித்த நாட்களில் இம்மர அழகூட்டங்களை காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.


நவம்பர் 27

சாக்கலேட் என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்க சொல் ஆகும். பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ் கிரீம்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கொலேட் ஒரு முக்கியமான இடுபொருளாகும். உலகில் மிகவும் விரும்பப்படும் சுவைமணங்களில் சாக்கொலேட்டும் ஒன்றாகும். மத்திய அமெரிக்காவில் தோன்றிய கொக்கோ மரத்தின் (Theobroma cacao) கொட்டைகளை நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தி, வறுத்து, அரைக்கும் போது கிடைக்கும் பொருட்கள் சாக்கொலேட் அல்லது கொக்கோ என்றழைக்கப்படுகின்றன. இவை ஒரு வீரிய சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை.


எட்டயபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர, உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார். எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.


நவம்பர் 26

இளையராஜா (பிறப்பு - ஜூன் 2, 1943) என்று பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்பிற்கும் பெயர் பெற்றவர்.


பனை, ஒரு மரம் என்று தமிழில் வழங்கப்படினும், தாவரவியல் ரீதியில் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.


நவம்பர் 25

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 6, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். ராஜா ரவிவர்மா கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா - நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.


இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு (சிலோன் என்று 1972க்கு முன்பும்) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பாலுள்ள ஒரு அழகான தீவு தேசம் ஆகும். அமைதியான நாடாக இருந்துவந்த இந்நாடு, கடந்த ஐந்து தசாப்தங்களாக இன முரண்பாடுகளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக அரசாங்கத்துக்கும், தொடக்கத்தில் பல தமிழ் போராளிக் குழுக்களுக்கும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்பியுள்ளது. கடந்த சில வருடங்களாக அமுலிலிருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கை நோர்வே நாட்டின் அனுசரணையோடு 2002இன் முற்பகுதியில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.


நவம்பர் 24

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரும் இந்தியாவின் நான்காம் பெரிய நகரும் ஆகும். 1996ஆம் வருடத்திற்கு முன்னர் இந்நகரம் மதறாஸ் (Madras) என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதலே சென்னை நகரம் முக்கிய நகரமாக வளர்ந்து வருகிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.


மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ல் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களை கண்டு பிடித்தார்.


நவம்பர் 23

ஐக்கிய இராச்சியம், மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது காமன்வெல்த் நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஒரு அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK என்றோ அல்லது (தவறுதலாக) பாரிய பிரிட்டன் என்றோ பிரிட்டன் என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பாரிய பிரிட்டன் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப் படுகிறது.


வந்தே மாதரம், இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் எழுதப்பட்டது. பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் ஆங்கிலேய அரசின் கீழ் பணிபுரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் அவருள் இருந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. 1870 வாக்கில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், God Save the Queen என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலை கட்டாயமாக்கினார்கள். இதற்கு எதிராக, பன்கிம் சந்திரர், இப்பாடலை தான் புலமை பெற்றிருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார்.


நவம்பர் 22

இந்தியா, தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியாவின் கடற்கரை மொத்தம் 7000 கி.மீ. நீளம் கொண்டது. நிலப்பகுதியில், வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கையும், மாலத்தீவும் இந்தியக்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் உள்ளன.


ஆப்பிள் ஒரு குளிர் பகுதிப் பழம் ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவோ காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும். மத்திய ஆசியாவில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லா குளிர் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிள் மற்ற பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும் அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.


நவம்பர் 21

நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப் படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப் படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச இயல்வதால்).


முதனி (Primate) என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும்பிரிவில் மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கி்ப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு, புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். உயிரின வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படும் இனம் இந்த முதனி இனம்.


நவம்பர் 20

கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில், இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை. தற்போது, இச்சேவை சோதனை நிலையில் (Beta) உள்ளது. இச்சேவை ஐக்கிய இராச்சியத்திலும், ஜெர்மனியிலும் கூகிள்மெயில் என அறியப்படுகின்றது. ஜிமெயில், ஏப்ரல் 1, 2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏற்கனவே பயன்படுத்துபவரின் அழைப்பிதழ் தேவை. அமெரிக்காவில் அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் வழியாகவும் வழங்கப்படுகின்றது.


தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, மேலும் பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் ஏழு கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.


நவம்பர் 19

ருக்மிணி தேவி அருண்டேல் (பிப்ரவரி 29, 1904 - பிப்ரவரி 24, 1986) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாக்ஷேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார். பத்மபூஷன் விருது, காளிதாஸ் சம்மன் விருது, சங்கீத நாடக அகாதெமி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.


பென்குயின்கள் தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பிரதேசங்களில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. பல பென்குயின்கள் உயிர் வாழ்வுக்கு krill, மீன், squid முதலிய கடல்வாழ் உயிரினங்களைச் சார்ந்துள்ளன. நீரின் கீழ் நீந்தி இவற்றைப் பிடித்து உண்கின்றன.


நவம்பர் 18

பட்டுப் பாதை என்பது பண்டைக் காலத்தில் கவிகை வண்டிகளும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 8000 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது. பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.


புலி ஒரு காட்டு விலங்காகும். உடலில் இருக்கும் பட்டை பட்டையான அமைப்பை வைத்து புலிகளை அடையாளம் காணலாம். காட்டுக்குள் சராசரியாக 15 வருடங்கள் வாழும் புலிகள் காடு அல்லாத சூழ்நிலையில் வாழும் காலம் 16 முதல் 18 வயது வரையே. நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் புலிகளுக்கு ஆற்றல் அதிகம். ஆறு-எட்டு கி.மீ. அகலமுள்ள நதிகளை சர்வசாதாரணமாக நீந்தவல்ல புலிகளால் 29 கி.மீ வரை நீந்த இயலும். தாக்குதல் காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதவிதமான தகவல் தொடர்பை புலிகள் கையாளுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். வங்காளப் புலி இந்தியாவின் தேசிய விலங்காகும். உலகில் உள்ள மொத்தப் புலிகளில் இராயல் பெங்கால் புலி எனப்படும் வங்காளப் புலிகளே 80% ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகின்றன. பெரும்பான்மையாக புலிகள் ஆசிய நாடுகளிலேயே காணப்படுகின்றன.


நவம்பர் 17

மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார். மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.


நாட்டார் பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும். இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.


நவம்பர் 16

ஆறு வகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ள உறவுமுறை முறைமைகளுள் இரோகுவாயிஸ் உறவுமுறை முறைமையும் ஒன்று. எஸ்கிமோ, ஹவாய், குரோ, ஒமஹா, சூடான் என்பன ஏனைய இந்து முறைமைகள் ஆகும். லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பவர், 1871 ஆம் ஆண்டில், அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான இரோகுவோய்ஸ் மக்கள் மத்தியில் ஆய்வு நடத்தும்போது இம்முறையை முதன் முதலில் அறிந்து கொண்டதனால் இம் முறைமைக்கு அந்த இனத்தின் பெயர் சூட்டப்பட்டது. இம் முறையில் தாய் தந்தையருடன் பிறந்த ஒத்த பாலினரைத் தாய் தந்தையரைக் குறிக்கும் உறவுமுறைப் பெயராலேயே அழைக்கும்போது, அவர்களுடன் பிறந்த எதிர்ப் பாலார் வேறு உறவுப் பெயர்களிட்டு அழைக்கப்படுகின்றனர்.


போத்துக்கீசர் என்னும் சொல் போர்த்துக்கல் நாட்டைத் தாய்நாடாகக் கொண்டவர்களை அல்லது போத்துக்கீச மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களைக் கொண்டவர்களைக் குறிக்கும். இவர்களில் பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். போத்துக்கீசர் தெற்கு ஐரோப்பிய மக்களாவர். இவர்கள் ரோமருக்கு முற்பட்ட கெல்ட்டிக் மற்றும் ஐபீரிய இனக்குழுக்களின் கலப்பினால் உருவானவர்கள். ரோமக் கலாச்சாரத்தின் செல்வாக்குப் பெருமளவுக்கு போத்துக்கீசக் கலாச்சாரத்தில் காணப்படுகின்றது. இது தவிர, கிரேக்கர், போனீசியர், கார்த்தஜீனியர் போன்றோரின் செல்வாக்கும் சிறிய அளவில் இவர்களிடம் காணப்படுகின்றது. போத்துக்கீச மொழி இலத்தீனில் இருந்து உருவானது.


நவம்பர் 15

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அதனை அழைப்பதற்கும், அடையாளம் காண்பதற்குமாகத் தனித்துவமான பெயர் ஒன்றை இடுவது உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற இந்தப் பெயரிடும் வழக்கம், உலகம் முழுவதிலும் ஒரே விதமாக இருப்பதில்லை. இது தொடர்பாகச் சமுதாயங்களிடையே பல வேறுபாடான நடைமுறைகள் காணப்படுகின்றன. அத்துடன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலேயே காலப்போக்கில் ஏற்படுகின்ற சமூக, அரசியல் மற்றும் இன்னோரன்ன நிலைமைகளாலும், அவை தொடர்பான தேவைகளாலும், மக்கட்பெயர்கள் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றங்களும் அவற்றின் விளைவுகளும், அச் சமுதாயத்தின், உலக நோக்கு, பண்பாடு, அதன் வரலாறு சார்ந்த பல அம்சங்களின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. இத்தகைய ஒரு பின்னணியிலே, யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு குறித்து இக்கட்டுரை ஆய்கிறது.


இந்தியக் கட்டிடக்கலை வரலாற்றில் திராவிடக் கட்டிடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப்பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய திராவிடக்கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை குப்தர்காலப் பௌத்த கட்டிடங்கள் சிலவற்றில் அவதானிக்ககூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பல்லவ அரசர்களின் கீழும் பின்னர் சோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர் ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது.


நவம்பர் 14

புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல், மற்றும் மெய்ப்பாடு (emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும்போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன. ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு, கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.


சிந்துவெளி நாகரிகம், எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது.


நவம்பர் 13

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 என்பது 1967-ல் நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரனை நடிகர் எம். ஆர். இராதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன.


மௌ டம் (Mau tam) என்பது 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கில் மரங்கள் எல்லாம் ஒருசேரப் பூத்து மடியும் ஒரு விந்தையான சுற்றுச்சூழல் நிகழ்வைக் குறிக்கும், மூங்கிற் சாவு எனப்பொருள்படும் மிசோ மொழிச் சொல்லாகும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இம்மாநிலத்தின் நிலப்பகுதியில் முப்பது விழுக்காடு பகுதியில் மூங்கில் காடுகள் உள்ளன. மௌ டம் நிகழ்வின்போது மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து பெருச்சாளிகள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக பிளேக் நோய் பரவ வாய்ப்புண்டாகிறது.


நவம்பர் 12

பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள ஒரு பறக்கும் பூச்சி. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் பறப்பதும் பலரும் கண்டு களிப்பது. இப்பூச்சி முட்டையிலிருந்து பட்டாம்பூச்சியாய் வளர்ச்சியடைவதும் மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை.


இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம் ஆகும். நடராசர் என்ற சொல் நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் எனப் பலவாறாகக் குறிப்பிடப்படும் சிவன் நடனத்தில் வல்லவனாக உருவகிக்கப்படுகிறான். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.



aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -