தெலுங்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தெலுங்கு తెలుగు(தெலுகு) |
||
---|---|---|
பேசப்படும் நாடுகள்: | இந்தியா | |
பகுதி: | ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு | |
மொத்தம் பேசுவோர்: | 76 மில்லியன் தாய்நிலத்தில், 86.1
மில்லியன் மொத்தம் (இரண்டாம் மொழியாகப் பேசுபவர்களையும் சேர்த்து) |
|
நிலை: | 13 (தாய்மொழியாய்) | |
மொழிக் குடும்பம்: | திராவிடம் தென்-நடு தெலுங்கு |
|
எழுத்து முறை: | தெலுங்கு எழுத்துக்கள் | |
அரசு ஏற்புத் தகுதி | ||
மொழியின் அரசு ஏற்பு நிலை: | இந்தியா | |
கட்டுப்படுத்தல்: | no official regulation | |
மொழிக்கான குறியீடுகள் | ||
ISO 639-1: | te | |
ISO 639-2: | tel | |
ISO 639-3: | tel | |
Note: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம் |
தெலுங்கு, தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசத்தில் அரசு ஏற்புபெற்ற மொழி. இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் தெலுங்கு ஒன்றாகும். இம்மொழி தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 17வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 8 கோடியே 30 இலட்சம் (83 மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் தெலுங்கு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] தோற்றம்
தெலுங்கு திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி. மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப்போல் அல்லாது, தெலுங்கு மொழி சமசுகிருதத்தில் இருந்து தோன்றவில்லை. இந்தியாவில் ஆரியமொழி இந்தியாவில் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் திராவிட மொழி பேசப்பட்டு வந்தது என நம்பப்படுகிறது. முழுவதுமாக நிறுவப்படாது இருப்பினும், சிந்து சமவெளி நாகரீகம் திராவிட மொழி நாகரீகமாக இருப்பதற்கு அதிக அடிப்படை வாய்ப்புகள் உள்ளன.
தெலுங்கு பழந்திராவிட மொழியில் இருந்து தோன்றிய ஒரு மொழி. இது தக்காண உயர்பீட நிலப்பகுதியில் உள்ள மக்கள் பேசும் தென்-நடு திராவிட மொழித் துணைக்குடும்பத்தை சார்ந்தது. இக்குடும்பத்தை சார்ந்த மற்ற மொழிகள் கொண்டி, கூய், குவி போன்ற தெலுங்குடன் மிகவும் நெருங்கிய தொடருபுடைய மொழிகள் ஆகும். இந்தியாவில் மிக அதிகளவில் பேசப்படும் திராவிட மொழி தெலுங்கே.
தெலுங்கு மற்ற மொழிகளின் சொற்களை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளும். சமசுகிருத மொழி தெலுங்கு இலக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தியது போல், வேறெந்த மொழியும் தாக்கம் ஏற்படுத்தியதில்லை என்று கூறுவர் (இதேக் கருத்தை வங்காளி, மராத்தி மொழியாளர்களும் கூறுவர்). தெலுங்கு மொழியில் பல எழுத்துக்கள் முக்கியமாக ஹகரம் கலந்த எழுத்துக்கள் சமசுகிருத மொழிக்காகவே நெடுங்கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சமசுகிருத்தின் தாக்கம் அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ளது தான். உருது மொழி மற்றும் ஆங்கில மொழி சொற்களைக்கூட தெலுங்கு மொழி ஏற்றுக்கொண்டுள்ளது.
[தொகு] சொற்பிறப்பியல்
கி.பி. 1000 ஆண்டுக்கு முந்தய கல்வெட்டுகளில் தெலுகு என்ற சொல் காணமுடியாது. 11வது நூற்றாண்டில் தெலுங்கு பூமிபாலுரு (తెలుంగు భూమిపాలురు ), தெல்கரமாரி ( తెల్గరమారి), தெலிங்ககுலகால (తెలింగకులకాల), தெலுங்க நாடோளகண மாதவிகெறிய (తెలుంగ నాడోళగణ మాధవికెఱియ) போன்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
11ஆம் நூற்றாண்டுக்கு பிறகே தெனுகு என்ற சொல் வழக்கில் வரத்துவங்கியது. சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து 'தெலுங்கு (தெலுகு)' தோன்றியிருக்கலாம் எனக்கருதுகின்றனர். திரிலிங்கம் என்பது காலேஷ்வரம், ஸ்ரீசைலம், திரக்ஷராமம் முதலிய மூன்று சிவத்தலங்களை குறிக்கும். இம்மூன்று இடங்களும் தெலுங்கு தேசத்தின் எல்லைகளாக அமைந்த காரணத்தினால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றன்ர். சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து 'தெலுங்கு (தெலுகு)' தோன்றியிருக்கலாம் எனக்கருதுகின்றனர். ஆனால் இது பின்னர் எழுந்த பண்பாட்டு அடிப்படையில் தரும் காரணம் எனவும் தெலுகு என்ற சொல்லே பழமையானது எனவும் வரலாற்றிசிரியர்களின் கருத்து தெரிவிக்கின்றனர். 12ஆம் நூற்றாண்டில் நவலக்ஷ தெலுங்கு( నవలక్ష తెలంగు) என்ற குறிப்பு காணப்படுகிறது.
தெலுங்கு என்ற சொல்லின் தோற்றம் குறித்து பலவாறாகவும் கூறப்பட்டுள்ளது. "தெலு" என்றால் வெண்மை என்று பொருள் எனவே வெண்மையான மக்கள் என்ற பொருளில் தெலுங்கு தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதே நேரத்தில் தென் - என்ற பழந்திராவிட சொல்லிலிருந்து, தென்னகத்தின் மக்கள் என்ற பொருளில் தெலுங்கு தோன்றி இருக்கலாம் எனவும் கருதுவது உண்டு.
எது எவ்வாறாக இருப்பினும், தெலுங்கு(తెలుగు - தெலுகு) தேசத்தின் பெயர் தெலிங்க தேசம் அல்லது தெலங்க தேசம் என்றிருந்திருக்க வேண்டும். எனவே அதன் வேர்ச்சொல் தெலி (తెలి - பிரகாசம்) ஆகவும் இருக்கலாம்.தெலுங்குபண்டிதர்கள் தெலுங்கு (తెలుగు - தெலுகு) என்பதன் சரியான வடிவம் தெனுகு எனக் கூறுகின்றனர். தெனுகு என்றால் தேன் போன்ற மொழி என்று பொருள் (తేనె (தேனெ) - தேன்). தேன் போன்ற இனிய மொழி ஆகையால் தெனுகு என்பது பிற்காலத்தில் தெலுகு என ஆகியிருக்கலாம் என்பது இவர்கள் கருத்து
[தொகு] மொழி வரலாறு
தெலுங்கு மொழியில் வரலாற்றை பின்வரும் கட்டங்களாக பிரிக்கலாம்
[தொகு] கி.மு 200 - கி.பி 500
பழங்கால பிராகிருத/சமசுகிருத பிராமி கல்வெட்டுகளில், தெலுங்கு இடம் மற்றும் பெயர்கள் காணப்படுகின்றனர். இதிலிருந்து ஆந்திர தேசத்தை ஆண்ட சாதவாகனர்கள் பிராகிருதத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எனத்தெரிகிறது. தெலுங்கு சொற்கள் மகாராஷ்டிரி பிரகிருத்த்தில் எழுதப்பட்ட பாடல்களில் காணப்படுகின்றன.
[தொகு] கி.பி 500 - கி.பி 1100
தெலுங்கு மொழி, கல்வெட்டுகள் முதன்முதலாக ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கி.பி 575ஆம் காலத்திய கல்வெட்டாகும். இக்கல்வெட்டு ரேனாட்டி சோழர்களால் எழுதப்பட்டதாக கருதப்பருகிறது. இவர்களே முதன் முதலாக சமஸ்கிருதத்தை விடுத்து உள்ளூர் மொழியான தெலுங்கில் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். இவர்களுக்கு பிறகு பிற சாளுக்யர்களும் கல்வெட்டுகளை தெலுங்கை பயன்படுத்த ஆரம்பித்தனர். இக்காலத்தில் தான் தெலுங்கு இலக்கியம் தோன்ற ஆரம்பித்தது. தெலுங்கில் எழுத்தப்பட்ட முதல் இலக்கியமாக கருதப்படும் நன்னய்யரின் மகாபாரதம் இக்காலக்கட்டத்திலே எழுதப்பட்டது. மேலும், இதே காலத்தில் தெலுங்கு மொழியில் பல்வேறு ஒலியியல் வேறுபாடுகள் ஏற்பட்டன.
[தொகு] கி.பி 1100 - கி.பி 1400
இக்காலக்கட்டத்தில் இலக்கிய தெலுங்கு பேச்சு வழக்கில் இருந்து மிகவும் வேறுபடத்துவங்கியது. ஒரு நிலையில் கேதனர் என்ற புலவர் மக்கள் பயன்படுத்தும் சொற்களை இலக்கியங்களில் கையாளாகாது, எனக்கருத்தை வெளியிட்டார். மேலும் பல வடமொழி நூல்கள் தெலுங்கில் மொழிப்பெயர்க்கப்பட்டது. மேலும் தெலங்காணா பகுதிகளில் சுல்தான்களின் இதே காலக்கட்டதில்தான் துவங்கியது
[தொகு] கி.பி 1400 - கி.பி 1900
இக்காலத்தில், தெலுங்கு மற்ற இந்திய மொழிகளைப் போலவே பலவிதமான வேறுபாடுகளை சந்தித்தது. இசுலாமிய தாக்கத்தின் காரணமாக தெலங்காணா வழக்கு மற்றப் பொதுத் தெலுங்கு வழக்கிலிருந்து மிகவும் வேறுபட்டுவிட்டது. தெற்கில் கோதாவரி நதி பகுதிகளில், விஜயநகர அரசு 1336 முதல் 1600 வரை மிகவும் செல்வாக்குடன் திக்ழ்ந்தது. விஜய நகர அரசர் கிருஷ்ண தேவராயரின் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என கருதப்படுகிறது. தெலுங்கு இலக்கியம் இவரது காலத்தில் மிகவும் எழுச்சியுடன் திகழ்ந்தது. விஜய நகர அரசின் வீழ்ச்சிக்கு பிறகு தெலுங்கு பேசும் பகுதிகளில் இசுலாமிய ஆட்சி நிறுவப்பெற்றது. இதன் காரணத்தால் பல பாரசீக மற்றும் உருது சொற்களும் தெலுங்கு மொழியில் கலந்தன.
[தொகு] கி.பி 1900 முதல் இன்று வரை
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயரின் ஆட்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் தாக்கம் தெலுங்கு மொழயில் ஏற்ப்பட்டது. குறிப்பாக சென்னை மாகாணத்தில் இத்தாக்கம் உணரப்பட்டது. இக்காலகட்டத்தில் பல்வேறு நவீன கால இலக்கியங்கள் தோன்ற துவங்கின.
ஆனால் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு தெலுங்கை, மக்கள் பேச்சு மொழிக்கு ஒட்டிய நடையில் தற்போது எழுதி வருகிறார்கள்.
[தொகு] பேசப்படும் பகுதிகள்
தெலுங்கு மொழி, இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் பேசும் மொழி. மேலும் தமிழ் நாடு, கர்நாடகம், ஒரிசா முதலிய பக்கத்து மாநிலங்களிலும் பேசப்படுகிறது. ஆந்திரத்தை அடுத்து தமிழ் நாட்டில்தான் அதிக அளவில் தெலுங்கு மொழி பேசுவோர் உள்ளனர். இதற்கு விஜயநகர அரசு காலத்தில் தமிழ் நாட்டில் தோன்றிய நாயக்கர் ஆட்சி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. நாயக்கர்கள் ஆட்சியின் போது ஆந்திரத்தில் இருந்து பல்வேறு மக்கள் தமிழ் நாட்டில் குடியேறினர்.
மேலும் பஹ்ரேய்ன், இங்கிலாந்து, ஃபிஜி, மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலும் இம்மொழி பேசப்படுகிறது.
[தொகு] அரசு ஏற்புநிலை
தெலுங்கு மொழி ஆந்திர மாநிலத்தில் அரசு ஏற்புபெற்ற மொழியாகும். மேலும் இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ள 22 மொழிகளில் தெலுங்கும் ஒன்று. இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் ஆட்சிப்பகுதியைச் சேர்ந்த யானம் பகுதியின் ஏற்புபெற்ற மொழியாகவும் இது விளங்குகிறது.
[தொகு] வட்டார வழக்குகள்
பேரத், தசரி, தொம்மரம், கொலரி, கமதி, கொண்டாவ், கொண்ட-ரெட்டி, சலேவரி, தெலங்காணம், வடகம், ஸ்ரீகாகுளம், விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ராயலசீமா, நெல்லூர், குண்டூர், வடரி மற்றும் ஏனாடு ஆகியவை தெலுங்கு மொழியில் வெவ்வேறு வட்டார வழக்குக்கள் ஆகும்.
தமிழ் நாட்டில் பேசும் தெலுங்கு மொழியை, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் வட்டார வழக்கென பிரிக்கலாம். மேலும், விருதுநகர், புதுக்கோட்டை, கடலூர், மதுரை, தஞ்சாவூர் பகுதிகளில் தெலுங்கு பேசுவோர் உள்ளனர். தமிழ் நாட்டில் பேசும் தெலுங்கில் அதிக அளவில் தமிழ் மொழி கலப்பைக் காண முடியும்.
[தொகு] செம்மொழியாக அறிவிக்க கோரிக்கை
இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்ததை அடுத்து தெலுங்கு மொழிக்கு செம்மொழி என்னும் சிறப்புநிலை வேண்டுமென கோரிக்கையை இந்திய அரசுக்கு விடப்பட்டுள்ளது
[தொகு] ஒலிகள் மற்றும் எழுத்துமுறை
முதன்மைக் கட்டுரை: தெலுங்கு எழுத்துக்கள்
தெலுங்கு எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. தெலுங்கு எழுத்துக்களை கோலமி போன்ற திராவிட மொழிகளை எழுதவும் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்து உதித்த பல்லவ கிரந்த எழுத்திக்களில் இருந்து தோன்றியது.
[தொகு] உயிரெழுத்துக்கள்
தெலுங்கில் திராவிட மொழிகளுக்கே உரிய எகர ஒகர ஒலியுடன் சமஸ்கிருததில் உள்ள அனைத்து உயிரெழுத்துகளும் உள்ளன்.
అ ఆ ఇ ఈ ఉ ఊ ఋ ౠ ఌ ౡ ఎ ఏ ఐ ఒ ఓ ఔ అం అః
[தொகு] மெய்யெழுத்துக்கள்
தெலுங்கு சமசுகிருத நெடுங்கணக்கில் உள்ள அனைத்து எழுத்துக்களுடன், திராவிட மொழிகளுக்கு உரிய ளகரம் மற்றும் றகரமும் கொண்டுள்ளது. தெலுங்கு மொழியில் பழங்காலத்தில் 'ழ' கரம் இருந்தது. ஆனால் தற்சமயம் அவ்வொலி மறைந்து விட்டது.
క ఖ గ ఘ ఙ
చ ఛ జ ఝ ఞ
ట ఠ డ ఢ ణ
త థ ద ధ న
ప ఫ బ భ మ
య ర ఱ ల ళ
వ స శ ష హ
தெலுங்கு மொழி மிகவும் இனிமையான மொழியாக என பலரால் கருதப்படுகிறது. தெலுங்கில் அனைத்து சொற்களும் இத்தாலிய மொழியைப் போல் உயிரெழுத்துடன் முடிவைடைகிறது. எனவே தான் இம்மொழியின் இனிமையைக்கருதி ஆங்கிலேயர்கள் இதை கிழக்கின் இத்தாலிய மொழி(Italian of the East) என அழைத்தனர்.
தெலுங்கில் ஒரு பெயர் அறியப்படாத கவி இவ்வாறு கூறியுள்ளார்.
“ | வடமொழியின் சக்கரை பாகு, தமிழின் அமிழ்தத்தண்மை கன்னடத்தின் கஸ்தூரி நறுமணம் இவை அனைத்தையும் ஒரு சேர உடையது தான் தித்திக்கும் தெலுங்கு | ” |
[தொகு] இலக்கியம்
தெலுங்கு இலக்கியத்தை கீழ்க்கண்ட காலங்களாக பிரிப்பர்
- நன்னய்யருக்கு முற்காலம் - கி.பி 1020 வரை
- புராண காலம் - கி.பி 1020 முதல் கி.பி 1400 வரை
- ஸ்ரீநாதரின் காலம் - கி.பி 1400 முதல் கி.பி 1510 வரை
- பிரபந்த காலம் - கி.பி 1510 முதல் கி.பி 1600 வரை
- தெற்கு காலம் - கி.பி 1600 முதல் கி.பி 1820 வரை
- நவீன காலம் - கி.பி 1820 முதல் இன்று வரை
தெலுங்கு மொழியில் முதல் இலக்கியமாக நன்னய்யரின்(1022-1063) மகாபாரதம் கருதப்படுகிறது. இவரது காலத்துக்கு பிறகு திக்கன்னா, எர்ரன்னா போன்ற பல்வேறு புலவர்கள் தெலுங்கு இலக்கியம் செறிவடைந்தது. பிறகு ஸ்ரீநாதர்(1365-1441) என்பவர் பிரபந்த இலக்கியத்தை பிரபலமாக்கினார். வேறு சிலர் வடமொழி நூல்களை தெலுங்கு மொழியில் மொழிப்பெயர்த்தனர். ஸ்ரீநாதருக்கு பிறகு போதனா(1450-1510), ஜக்கன்னா, கௌரனா போன்றோர் சமயம் தொடர்பான இலக்கியங்களை எழுதினர்.
எனினும், பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் காலம் தான் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. விஜயநகர காலத்தில் தஞ்சாவூர் மற்றும் மதுரையில் பல்வேறு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றின. பிறகு சுல்தான்களின் ஏற்பட்டதால் தெலுங்கு இலக்கியத்தில் சற்று தோய்வு ஏற்ப்பட்டது. இக்காலக்கட்டத்தில் தான் தியாகராயர் தன்னுடைய கீர்த்தனைகளை தெலுங்கு மொழியில் எழுதினார்.
20ஆம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் இலக்கியங்களின் தாக்கத்தால் சிறுகதை, நாவல் போன்ற நவீன கால இலக்கியங்கள் தோன்றின