திபெத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திபெத்துக்கு வெளியே வாழும் திபெத்தியர்கள் உரிமை கொண்டாடும் பகுதி | |||||||||
மக்கள் சீனக் குடியரசு வரையறுக்கும் திபெத் பகுதி | |||||||||
திபெத் தன்னாட்சிப் பகுதி (சீனாவின் கட்டுப்பாட்டில்) | |||||||||
அக்சாய் சின் என்ற பகுதியின் ஒரு பாகம் (இந்தியா உரிமை கொண்டாடுகிறது) | |||||||||
திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு பகுதியாக சீனா உரிமை கொண்டாடுகிறது. | |||||||||
வரலாற்றுரீதியாக திபெத் கலாசார மையத்தில் அடங்கும் மற்றைய பகுதிகள் |
திபெத் நடுவண் ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம். அந்நிலம் சார்ந்த மக்களான திபெத்தியர்களின் தாயகம். ஏறத்தாழ 4,900 மீட்டர் (16,000 அடி) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை "உலகத்தின் கூரை" என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். புவியியல்படி, திபெத், நடுவண் ஆசியாவின் ஒரு பகுதி என்று யுனெஸ்கோ, மற்றும் பிரிட்டானிகா[1] கலைக்களஞ்சியம் கருத, சில கல்விசார் நிறுவனங்கள், கேள்விக்கு உரியதாக, அது தெற்காசியாவின் பகுதியாகக் கருதுகிறார்கள். தற்போது இதன் பெரும்பாலான பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற பெயரில் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
திபெத்தின் பல பகுதிகளை ஏழாம் நூற்றாண்டில், சாங்ட்சன் கேம்போ (Songtsän Gampo) எனும் அரசர் ஒருங்கு இணைத்தார். 1600 இன் தொடக்க காலத்தில் இருந்து தலாய் லாமாக்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை (பெயரளவிலாவது)[2] ஏற்றிருந்தார்கள். இவர்கள், அவலோகிதர் என்ற போதிசத்துவ தருமத்தின் வெளிப்பாடுகளாக நம்பப்படுகிறார்கள்.
1644 முதல் 1912 வரை சீனாவை ஆண்ட மஞ்சூரிய அரசு, 1571 இல், தலாய் லாமாவை திபெத்தின் அரசியல் மற்றும் ஆன்மீக தலைவராக ஏற்படுத்தியது. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை, தலாய் லாமாவும் அவரது பிரதிநிதிகளும் வழிவழி தலைநகரான லாசாவை இருப்பிடமாக கொண்டு திபெத்தின் பெரும்பகுதியின் அரசியல் அதிகாரம் பெற்றவராக, மதம் மற்றும் நிர்வாக பணி செய்துவந்தார்கள்.
19ஆம் நூற்றாண்டில், விக்டோரியா மகாராணியின் பிரித்தானியாவுக்கும் ருசியாவின் சார் மன்னர்களுக்கும் இடையே, நடுவண் ஆசியாவில், நடந்த ஆதிக்க போட்டியில், ஃபிரான்சிஸ் யன்ங்ஹஸ்பண்ட் (Francis Younghusband) என்ற கவர்ச்சியான போர்மறவரின் தலைமையில் ஒரு பிரித்தானிய படை இறுதியாக திபெத்தில் உள்புகுந்து, திபெத்தின் படைவீரர்களை மாக்சிம் துப்பாக்கி கொண்டு வீழ்த்தி, 1904 இல் லாசாவை கைப்பற்றியது. இந்த படையெடுப்பு, பிரித்தானியாவுக்கும் திபெத்துக்கும் ஓர் அமைதி உடன்பாடு ஏற்பாட்டுக்கு வழி செய்தது. சில திபெத் வரலாற்றாளர்கள், இந்த தொலைதூர மலைநாடு ஒரு தனிநாடு என்பதற்கு, இந்த உடன்பாட்டை ஆதாரமாக காண்பார்கள். இந்த படையெடுப்பால் சீனப் பேரரசு கொதிதெழுந்தாலும், அதை நிறுத்த ஒன்றும் செய்ய இயலாமல், திபெத்தின் மேல் தனது கோரிக்கையை காக்கும் வண்ணம், பிரிட்டனுடன் ஓர் அரசுறவு (diplomatic) போராட்டம் நடத்தியது[3].
திபெத் 1911 இல் சீனாவிடம் இருந்து விடுதலை அறிவிப்பு செய்தது. ஆனால், எந்த ஒரு மேற்கத்திய நாடும் அதன் விடுதலைக்கு ஆதரவாக வரவோ அல்லது தூதரக உறவு வைத்துக்கொள்ளவோ ஒருபோதும் முன்வரவில்லை[4]. சீன மக்கள் குடியரசு, வரலாற்று பதிவுகளை சுட்டிக்காட்டியும், திபெத்திய அரசுடன் 1951 இல், பதினேழு அம்ச உடன்பாட்டை கையொப்பம் பெற்றும், திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக கோரிக் கொண்டது.
திபெத்தில் சீனாவின் தளைக்கு கட்டுப்படாத பல ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பதற்கு வரலாலற்றுப் பதிவுகள் உள்ளன. ஆனால் சீனர்களோ, அவரது பேரரசின் தூதர்கள் 1727 இல் இருந்தே இருப்பதால், லாசா சீனப்பேரரசுக்கு கட்டுப்படவேண்டும் என்கிறார்கள்[3]. 1914 இல் கூட்டிய சிம்லா மாநாடு, யாங்ட்சி (Yangtze) ஆறும் இமயமும் திபெத்தின் எல்லைகளாக அமைத்தன. ஆனால் சீனா திபெத்தின்மேல் உள்ள தன் ஆதிக்கத்தை கோர ஓயவில்லை. அடுத்த 35 ஆண்டுகளில் அவர்கள் கையாண்ட வித்தைகள், திபெத்தின் தனிநாட்டுக்கு, பன்னாட்டு ஆதரவு கிட்டாமல் போனது[3].
1949-1950களில், சீன மக்கள் குடியரசு ஏற்படுத்திய உடனேயே, தலைவர் மா சே துங், மக்கள் விடுதலை படை கொண்டு, திபெத்தை விடுவிக்க ஆணை இட்டார். திபெத்தின் பல பிரபுக்களும், பாட்டாளிகளும் சீன அரசுக்கு ஒத்துழைத்தனர். என்றாலும் நில சீர்திருத்தங்களாலும், மற்றும் புத்த மதம் தொடர்பாகவும் சண்டைகள் தோன்றின. 1959 இல் தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்[3].
1972 இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மாவோவுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள முடிவெடுக்கும் வரை சி. ஐ. ஏ உளவு நிறுவனம் மறைமுக கொரில்லா போருக்கு நிதி உதவி செய்து வந்தது. பஞ்சம், மற்றும் கலாச்சார புரட்சிக் காலத்தில் சீனாவின் வன்முறைக்கு, திபெத்தின் எதிர்ப்பு வலுப்பட்டாலும் பயனின்றி போயின[3].
தற்காலத்தில், உலகின் எல்லா நாடுகளும் திபெத்தின்மேல் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. புலம்பெயர்ந்து அமைந்த திபெத்திய அரசின் தலைவரான தலாய் லாமா, திபெத்தில் சீனாவின் இறையாண்மையை மறுக்கவில்லை. "திபெத் தனிநாடு கேட்கவில்லை. தன்னாட்சிதான் கேட்கிறது." ஆனால் சீனர்களோ அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று முன்னிலும் திடமாக இருக்கிறார்கள்.
[தொகு] கலைகள் - படத் தொகுப்பு
[தொகு] உசாத்துணைகள்
- ↑ ப்ரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- ↑ Wang Jiawei, "The Historical Status of China's Tibet", 2000, pp. 170–3
- ↑ 3.0 3.1 3.2 3.3 http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article3559353.ece
- ↑ Virtual Tibet: Searching for Shangri-La from the Himalayas to Hollywood, page 24