குருதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குருதி என்பது விலங்கினங்களின் உடலில் உள்ள நாளங்கள் (உள் துளையுள்ள குழாய் போன்ற உறுப்பு) வழியாக பாயும் இன்றியமையாத செந்நிற நீர்மப் பொருள். தமிழில் குருதியை அரத்தம், இரத்தம், உதிரம், செந்நீர் என்ற பிறபெயர்களாலும் அழைப்பர். மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான சத்துப்பொருட்களையும், இன்றியமையாத ஆக்ஸிஜன், குளூக்கோசு போன்ற பொருட்களையும் எடுத்துச் செல்வதும், கழிவுப்பொருட்களை (கார்பன்-டை-ஆக்சைடு , லாக்டிக் காடி போன்றவற்றை) நீக்குதலும் முக்கியமான பணியாகும். குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும்.
குருதி என்பது சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், குருதி நுண் திப்பிகள் கொண்ட நீர்மப்பொருள். குருதியில் உள்ள திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், நீர்மப்பொருள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம் (96%). வெள்ளை அணுக்கள் 3%, நுண் திப்பிகள் (தட்டுகள்) 1%.
மாந்தனின் உடலில் சுமார் 4-5 லிட்டர் குருதி ஓடும். 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கி.கிராம் எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு குருதியும், 4 கி.கிராம் உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) குருதி ஓடும். எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் குருதியிழப்பு பெரிதும் தீங்கிழைக்க வல்லது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும் உயரமான இடங்களில் வாழ்பவர்களின் உடலில் குருதியின் அளவு சுமார் 1.9 லிட்டர் அதிகமாக இருக்கும்.
குருதி செப்பமுற இயங்க வேறு பல உறுப்புகளும் துணைபுரிகின்றன. குருதி ஆக்ஸிஜனை நுரையீரல் வழியாக பெறுகின்றது. பின்னர் குருதியோட்டம் திரும்பும் வழியில் கார்பன்-டை-ஆக்சைடு வளிமத்தை நுரையீரல் பெற்று, வெளிவிடும் மூச்சின் வழியாக வெளியேற்றுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] குருதியில் உள்ள குருதிநீர்மம் (blood plasma)
குருதிநீர்மம் என்பது மஞ்சள் நிற (வைக்கோல் நிறம்) நீர்மம். இதுவே குருதியின் கன அளவில் 55% முதல் 65% ஆகும். குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனது. இந்த மஞ்சள் நிற குருதிநீர்மத்தில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும், நுண்ணிய திப்பிகளும் கூழ்மங்களாக (புதைமிதவிகளாக (colloids)) இருக்கின்றன. குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனதெனினும், நூற்றுக்கணக்கான வேறு பொருட்களும் உள்ளன. அவற்றுள் பல்வேறு புரதப்பொருள்கள் (proteins), உடல் செரித்த உணவுப்பொருட்கள், கழிவுப் பொருட்கள், உப்புபோன்ற தாதுபொருட்கள் சிலவாகும்.
குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் ஆல்புமின் (albumin, வெண்ணி (புரதம்)), ஃவைபிரினோஜன் (fibrinogen, நாரினி (புரதம்)), குலோபுலின் (globulin), நுண்குளியம் (புரதம்), என்பவை சில. ஆல்புமின் (வெண்ணி (புரதம்)) என்பது குருதியை குருதிக் குழாய்களுக்குள் (நாளங்களுக்குள்) இருக்க துணை புரிகின்றன. இந்த வெண்ணி என்னும் ஆல்புமின் குறைந்தால், குருதி குழாய்களில் இருந்து கசிந்து வெளியேறிப் பக்கத்து திசுக்களுக்குச் சென்றுவிடும். இதனால் எடிமா (edema) என்னும் வீக்கம் ஏற்படும். வைபிரினோஜன் (நாரினி) என்னும் புரதப்பொருள் இருப்பதால், அடிபட்டால் குருதி இறுகி குருதி உறைந்து வெளிப்படாமல் தடுக்க இயலுகின்றது. இந்த நாரினி இல்லையெனில் புண்ணில் இருந்து குருதி வெளியேறுவது நில்லாது. நுண்குளியம் என்னும் மிகச்சிறு உருண்டை வடிவில் உள்ள புரதப்பொருள் பல உள்ளன, அதில், காமா (gamma) நுண்குளியம் என்பது நோய் தொற்றுவதைத் தடுப்பது.
[தொகு] சிவப்பணுக்கள்
குருதிக்குச் செந்நிறம் தருவது இவையே. ஒரு மைக்ரோ லிட்டரில் (லிட்டரின் மில்லியனில் ஒரு பகுதி) சுமார் 4 முதல் 6 மில்லியன் சிவப்பணுக்கள் உள்ளன. ஒவ்வொரு சிவப்பணுவும் சுமார் 7 மைக்ரோ மீ விட்டம் கொண்டது (ஒரு மைக்ரோ மீ = ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) வளரும்
[தொகு] குருதியின் வகைகள்
குருதியில் நான்கு வகைகள் உள்ளன. அவையாவன:
- A
- B
- AB
- O
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- குருதிக் கூறுகள்
- இரத்தக் கொடை
- விலங்கு இரத்ததை உணவாக குடிப்பது பற்றிய கருத்துக்கள்
- செயற்கைக் குருதி
- குருதியும் மத நம்பிக்கைகளும்