முதலாளித்துவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறைமையாகும். அத்துடன் இம் முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகள் தொடர்புபடுகின்றன.
முதலாளித்துவச் செயற்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டுக்கும், 19 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஐரோப்பாவில் நிறுவனப்படுத்தப்பட்டது. வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியது. இது இங்கிருந்து, சிறப்பாக இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும் தொழில்மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக விளங்கியது.
கால அடிப்படையிலும், புவியியல், அரசியல், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலும், முதலாளித்துவம் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றது. பல நாடுகளைப் பொறுத்து இதைக் கலப்புப் பொருளாதாரம் என்று அழைப்பதே பொருத்தம் எனச் சிலர் கருதுகின்றனர்.