அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (ஆகஸ்ட் 27, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.
பொருளடக்கம் |
[தொகு] தொடக்க வாழ்க்கை
யாழ்ப்பாணம் சுழிப்புரத்தைச் சேர்ந்த தொடரூந்து நிலைய பொறுப்பாளரான அப்பாபிள்ளைக்கும் வல்லியம்மைக்கும் பிள்ளையாக 1927 ஆகஸ்ட் 27 ஆம் நாள் பிறந்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் சட்டத்தரணியாக வேலைச் செய்து வந்தார். [1]
[தொகு] அரசியல் வாழ்க்கை
சட்டத்துரையை கைவிட்டு தந்தைச் செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துக் கொண்டார். 1952 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார்.[1][2]
இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தைச் செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.
1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவியை வகித்த ஒரே தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.
[தொகு] கொலை
இக்கட்டுரை விக்கிபீடியாவின் நடுநிலைக்கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம். ஒரு விக்கிபீடியர் இக்கட்டுரையின் நடுவு நிலைமையை ஆராயக் கோரிப் பரிந்துரைத்திருக்கிறார். இப்பரிந்துரை குறித்த உரையாடலை இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் காணலாம். |
எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.
இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Staff Reporter. "Recalling Amirthalingam", The Hindu, 2005-08-20. 2008-05-20 அன்று தகவல் பெறப்பட்டது.
- ↑ சத்தியேந்திரா, நடேசன். "Appapillai Amirthalingam", 2 July 1999. 2008-05-20 அன்று தகவல் பெறப்பட்டது. (ஆங்கிலம்)