மாசி மகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
[தொகு] கர்ணபரம்பரைக்கதை
முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரகத்தி அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.
இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.
ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.
அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்தால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.
மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,
இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
[தொகு] உசாத்துணை
- விரதவிதிகள் - திருக்கேதீச்சரத் திருக்கோவில் மகாசிவராத்திரி மட பரிபாலன சபை - 2007
பண்டிகைகள் (இந்து நாள்காட்டியில்) | |
---|---|
போகி | மகர சங்கிராந்தி | தைப்பொங்கல் | மாட்டுப் பொங்கல் | தைப்பூசம் | தை அமாவாசை | மகா சிவராத்திரி | மாசி மகம் | ஹோலி | பங்குனித் திங்கள் | பங்குனி உத்தரம் | தமிழ்ப் புத்தாண்டு | சித்திரைப் பரணி | சித்திரா பௌர்ணமி | உகாதி | இராம நவமி | திருவிளக்குப் பூசை | வைகாசி விசாகம் | ஆனி உத்தரம் | ஆடிப்பூரம் | ஆடி அமாவாசை | ஆடிச் செவ்வாய் | கிருஷ்ண ஜெயந்தி | ஓணம் | ஆடிப்பூரம் | ஆவணி சதுர்த்தி | ஆவணி மூலம் | ரக்ஷா பந்தன் | விநாயகர் சதுர்த்தி | நவராத்திரி நோன்பு | விஜயதசமி | தீபாவளி | கந்த சஷ்டி | கேதாரகௌரி விரதம் | பிள்ளையார் பெருங்கதை | கார்த்திகை விளக்கீடு | திருவாதிரை நோன்பு | சனிப்பிரதோஷ விரதம் | ஏகாதசி விரதம் | வைகுண்ட ஏகாதசி | வரலட்சுமி நோன்பு | புரட்டாதிச் சனி | திருவெம்பாவை நோன்பு | மார்கழித் திருவாதிரை | கும்பமேளா |