பூச்சிக்கொல்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூச்சி கொல்லி அல்லது பூச்சி நாசினி என்பது, மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பதார்த்தத்தையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பதார்த்தங்களின் கலவையையோ குறிக்கும்.
பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் குடம்பிகளையோ அழிக்கவல்லவை.
பூச்சிக் கொல்லிகள் வேளாண்மை, மருத்துவம், தொழில்துறை ஆகியவற்றிலும், வீடுகளிலும் பயன்படுகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் வேளாண்மை உற்பத்தியின் பெரும் வளர்ச்சிக்கான முக்கிய காரணம் இதன் பயன்பாடே என நம்பப்படுகின்றது. ஏறத்தாழ எல்லாப் பூச்சிக்கொல்லிகளுமே வாழ்சூழல் முறைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கக் கூடியவை.
[தொகு] பூச்சிகொல்லிகளின் வகைகள்
கரிம பூச்சிக் கொல்லிகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- குளோரீன் சேர்ந்த சேர்மங்கள். இவை டிடிரி (டை குளோரோ டைஃபீனைல் ட்ரை குளோரோ ஈத்தேன், DDT), பிஎச்சி (பென்சீன் ஹெக்சா குளோரட், BHC) போன்றவை.
- பொஸ்பரஸ் சேர்ந்த சேர்மங்கள்; எ-கா: பாரதையான் (Parathion).
பிஎச்சி என்பதே முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லியாகும். ஆனால் இம்மருந்துகளையும் எதிர்த்து பூச்சிகள் வாழ் முற்பட்டன. அத்துடன் இம்மருந்துகள் நிலத்தில் தங்கி நீர்நிலைகளில் சேரத்தொடங்கின.
பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட டிடிரி பெரும்பாலும் மலேரியாவைக் கட்டுப்படுத்தவும் பயிர்த்தொழிலில் கேடு விளைவிக்கும் உயிரினங்களைக் கொல்லவும் பயன்படுத்தப்பட்டது.
[தொகு] பூச்சிக்கொல்லிகளின் கேடுகள்
பூச்சிக் கொல்லிகளுள் பல விவசாயத்தில் பயன்படும் வேதிப் போருட்களாகும். இவை சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் பிரச்சினையையும் கிளப்பியிருக்கிறது. சில வேஎதிப் பொருட்கள் காய்கறிகளிலுள்ள திசுக்களில் சேர்ந்து மனிதரையும் பாதிக்கக்கூடிய அளவு நச்சுத்தன்மையை அடைகின்றன. இவ்வாறான நச்சுப்பொருட்கள், உணவுச் சங்கிலியில் செறிவடைந்து வருகின்றன.