கே. எம். ஆதிமூலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கே. எம். ஆதிமூலம் (1938 - ஜனவரி 15, 2008) தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் ஆவார். கோட்டு ஓவியத்தை வெகு மக்கள் ஊடகங்கள் வழியாக பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த இவர், கல்வெட்டு பாணியிலான புது வகை எழுத்து அழகியலை உருவாக்கியவர். மனிதநேய படைப்பாளியாக போற்றப்படுகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
திருச்சி, துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவர் ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். 1959 இல் சென்னைக்கு வந்தவர் சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று 'டிப்ளோமா' பட்டம் பெற்றார்.
சென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஓவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன.
1966-இல் மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியின் பல்வேறு பரிமாணங்களைக் வெளிப்படுத்தும் வகையில் 100 ஓவியங்களை வரைந்தார். அதன் பின்னர் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
இவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர்.
இவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம், சென்னை அருங்காட்சியம் உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் ஏராளமான ஓவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார்.
வண்ண ஓவியங்களிலும், வரைகலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஓவியர் ஆதிமூலம். 'நான் துரத்தும் நிலம்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது தைல வண்ண ஓவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டுயவை. அவரது கோட்டு ஓவியங்கள் மிகப் பிரபலமானவை.
தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரே வகையான தட்டையான எழுத்துருக்கள் புழங்கிவந்த காலத்தில் அழகான நவீன எழுத்துருக்களை உருவாக்கி அளித்தார். திருக்குறள் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டினார்.
[தொகு] விருதுகள்
லலித் கலா அகாடமியின் தேசிய விருது, மும்பாய், கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஓவியத் துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர்.
[தொகு] மறைவு
இவர் தனது கடைசி காலத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். ஜனவரி 15, 2008 இல் சென்னையில் தனது 70வது அகவையில் காலமானார்.
[தொகு] வெளிவந்த நூல்கள்
- பெட்வீன் த லைன்ஸ் - 1962 முதல் 1996 வரை வரைந்த ஓவியங்களின் தொகுப்பு
- உயிர்க்கோடுகள்: கோபல்லபுரத்து மக்கள், கரிசல்காட்டுக் கடுதாசி ([1])
- The Art of Adimoolam, Gayatri Sinha, Mapin Publishing, 2005, p.104