குறோணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அய்யாவழி |
அய்யா வைகுண்டர் |
அகிலத்திரட்டு |
கோட்பாடு |
சமயச் சடங்குகள் |
சுவாமிதோப்பு பதி |
அய்யாவழி மும்மை |
போதனைகள் |
அருல் நூல் |
அய்யாவழி புராண வரலற்றின்படி உலகில் உயிரியல் தோற்றத்துக்கான மூலமாகவும் தீமையின் மொத்த உருவமாகவும் தோன்றிய முதல் அசுரனே குறோணியாவான். இவன் அகிலத்தில் கூறப்பட்டுள்ள எட்டு யுகங்களில் முதல் யுகமான நீடிய யுகத்தில் தோன்றியவனாவான்.
பொருளடக்கம் |
[தொகு] உருவ அமைப்பு
நீடிய யுகம் தோன்றிய உடன் இவ்வுகத்துக்கு யாரை உலகில் இருத்துவோம் என மும்மூர்த்திகளும் அலோசித்தனர். ஆலோசித்து தில்லையில் ஈசன் ஒரு வேள்வி வளத்தினார். இவ்வேள்வியில் மலையைப் போன்ற பெரிய உருவம் உடையவனாய் குறோணி பிறந்தான். அவன் அறத்தை அறியாதவனாகவும், உடம்பில் சதை நிறைந்து அண்டத்தைப் போன்று பெரியவனாகவும் இருந்தான். அவன் முகம், கண்கள் எல்லாம் முதுகு புறத்தின் மேல் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு கோடி கைகள், மற்றும் ஒருகோடி கால்களை உடைய அவனின் உயரம் நான்கு கோடி முழங்களாகளாகும். அவன் நடக்கும் போது கால் மாறி வைக்க, கயிலை கிடுகிடென ஆடும்.
[தொகு] குறோணி பாடு
இவ்வகையினாலான உடலமைப்பை உடைய அவன் சிறிது காலம் தூங்கி விழித்த போது அவனுக்கு மிகுந்த பசியாக இருந்தது. அவனது கடும் பசியால் கண்டவை எல்லாவற்றையும் எடுத்து விழுங்க துடித்தான். எதை உண்டாலும் பசி தீராது என உணர்ந்த அவன், கடலின் நீர் அனைத்தையும் வாரிக் குடித்தான். கடலின் அனைத்து நிரும் குடித்த பிறகும் அவனின் கடைவாய் கூட நனையவில்லை. அவனது குடல் எல்லாம் கொதித்ததால், உலகத்தை எடுத்து விழுங்க ஆர்ப்பரித்து நின்றபோது, கயிலையை கண்ட அவனுக்கு அதன் மேல் ஆவல் பிறக்க, கயிலையை எடுத்து விழுங்கும் போது, மாயன் அதிலிருந்து தாவி குதித்து தப்பினார்.
[தொகு] குறோணி வதம்
பின்னர் பூலோகம் வந்து சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். இத்தவத்தைக் காண சன்னியாசி வேஷம் பூண்டு வந்த சிவன், மாயனைப் பார்த்து "நீ யார்?, இவ்வனத்தில் வந்து என்னை நினைத்து தவம் செய்யக் காரணமென்ன?" என்று கேட்டார். அதற்கு திருமால் நடந்தவைகளைக் கூறி இக்கொடிய குறோணி தனை ஆறு துண்டுகளாக வெட்டி அழித்து தொல் புவியில் இட்டிட வரம் தர வேண்டும் என கூறினார். இதைக் கேட்ட சிவனார் விஷ்ணுவைப் பார்த்து, நீர் கூறியதுபோல் இவனை அழித்தால் அந்த ஆறு துண்டுகளும் பின் தொடர்ந்து வரும் ஆறு யுகங்களிலும், யுகத்துக்கு ஒரு துண்டு வீதம், உமக்கு மாற்றானாய் பிறக்கும். அதனால் யுகத்துக்குகம் உத்தமனாய் நீர் பிறந்து அவ்வொவ்வொரு துண்டுகளையும் அழைத்து, பின் இவன் உயிரை நடுக் கேட்டு, நரகக் குழியில் அடைக்க வேண்டும் என கூறி, திருமாலுக்கு அதற்கான விடையைக் கொடுத்தார்.
விடை வேண்டியத் திருமால் கோபத்தால் வெகுண்டெழுந்து குறோணி தனை ஆறு பெரிய துண்டுகளாய் வெட்டிப் பிளந்தார். அவர் வெட்டிப் போட்ட துண்டுகளை தேவர்கள், எடுத்துச் சென்று உலகத்தில் போட்டனர். அவனது உதிரங்களை, குளம் போன்ற பெரிய குழிகளை வெட்டி அதன்மேல் உயர்ந்த பீடமும் போட்டனர்.
[தொகு] குறோணி - தத்துவப் பார்வை
தத்துவ முறையாக, தேவர்கள் மனதில் உருவான ஆணவ அழுக்கே குறோணி என உருவகிக்கப் பட்டிருப்பதாகவும் கருத்து உள்ளது.
இக்கூற்றின் படி கயிலை என்பது இதயம் எனவும், குறோணி என்பது பருப்பொருள் அல்ல என்றும், மனதில் எழும் அஞ்ஞானத்தின் சூக்கும வெளிப்பாடே அது எனவும், பசியால் அவன் அருந்தும் கடல் நீர் என்பது சம்சார சாகரம் எனவும், வெட்டப்படும் ஆறு துண்டுகளும் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அகப் பகைகள் எனவும் பொருள் கொள்ளப்படுகின்றன. இப்பார்வைக்கு பரவலாக அய்யாவழி சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றபோதும், அய்யாவழி ஆய்வலர்கள் சமய ஆய்வின் போது பரவலாக இதில் பெரும்பான்மைப் பகுதிகளை கருத்தில் கொள்கின்றனர்.
[தொகு] பரிணாம கொள்கையும் குறோணியும்
அய்யாவழியில் உயிர்களின் பரிணாமக் கொள்கை, யுகங்கள் என்னும் கதையோட்டத்தின் மூலமாக உணர்த்தப்படுவதாக சில ஆய்வாளர்கள் துணிகின்றனர். இக்கூற்று வழி, குறோணி வெட்டப்படும் முதல் யுகமான நீடிய யுகத்தை அனாதி நிலை எனக்கூறி வரம்புக்குட்படாதது (பிறப்பு இறப்புக்கு உட்படாதது) எனவும், பின்னர் வரும் ஒவ்வொரு யுகங்களிலும் தீய சக்தியின் ஆதிக்கத்திலிருக்கும் உயிர்கள் (ஆன்மா)படிப்படியாக பரிணாமம் எனப்படும் அதன் ஆதி இறைநிலையை அடைந்து வரும். அவைகள் இறைநிலை அடைய அடைய அகப்பகையாக இருக்கும் அந்தந்த யுகத்தின் அசுர சக்தி (குறோணியின் கூறுகள்) அழிந்து கொண்டே வரும். இறுதியில் அவைகள் முழுமையாக அழிந்து ஆன்மாக்கள் வைகுண்டத்துடன் இணைவதுடன் அவை முழு பரிணாமத்தை (இறை நிலை) அடைகின்றன என்பதாகும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
[தொகு] ஆதாரம்
- நா.விவேகானந்தனின், அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், பாகம் - 1, பக்கம் 29-31.
- அரி சுந்தர மணியின், அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, பக்கம் 36-37.
- தெச்சணத்து துவாரகா பதி வெளியீடான, அகிலத்திரட்டு அகக் கோர்வை, பக்கம் 3.