வர்க்கம் (சமூகவியல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சமூகவியலில் (குமுகாயவியலில்), வர்க்கம் அல்லது வகுப்பு என்பது, ஒரே சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களின் குழுவைக் குறிக்கும். பழைய காலத்தில் இருந்தே, சமூகத்தில் நிலவும் வகுப்பு (வர்க்க) வேறுபாடுகளைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். தத்துவஞானியான அரிஸ்டாட்டில், செல்வர், வறியவர், இடைநிலையினர் என மூன்று வகுப்பினரைப் (வர்க்கத்தினரைப்) பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மார்க்சியக் கோட்பாட்டை நிறுவியவரான கார்ல் மார்க்ஸ், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வகுப்பினர் (வர்க்கத்தினர்) பற்றியே பேசுகிறார். ஆடம் சிமித் என்னும் பொருளியல் அறிஞர் தொழிலாளர், நில உடமையாளர், வணிகர் என்னும் மூன்று வகுப்பினர் பற்றிக் குறிப்பிட்டார் . இவர்கள் தவிர வேறு பலரும் சமுதாயத்தை வகுப்புகளாகப் பிரித்துள்ளார்கள். இவற்றுள் பொதுவாகக் காணப்படும் தன்மை என்னவெனில், இவர்கள் எல்லாருமே வர்க்கப் பிரிவுகளுக்கான அடிப்படையாகச் செல்வத்தை ஏற்றுக் கொண்டதேயாகும்.