மருந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மருந்து என்பது ஒர் உயிரினத்திற்கு ஏற்பட்ட நோயை அல்லது ஓர் உடற்கேட்டைக் தீர்க்கவோ தணிக்கவோ பயன்படும் ஒரு பொருள். அது இயற்கையில் கிடைக்கும் இலை, மரப்பட்டை, வேர், புல், பூண்டு, காய், பழம் என்று நிலைத்திணையின் (தாவரத்தின்) எப்பகுதியாகவோ, அல்லது செயற்கையாய் உருவாக்கிய வேதியியல் பொருளாகவோ இருக்கலாம். மாந்தர்களுள் உளவியல் நோயாக இருந்தாலும், சிலவற்றுக்கு, மூளையின் செயல் மாற்றத்தின் பொருட்டு மருந்துகள் கொடுப்பதுண்டு. சில மருந்துகளை வாய் வழியாக உட்கொள்ள வேண்டும், சில நேரடியாகக் குருதியில் சேர்க்க ஊசி வழியாக ஏற்ற வேண்டும், சில உடலின் புறத்தே மட்டும் அப்பவோ, பூசவோ, தேய்க்கவோ வேண்டும். இப்படி மருந்துகளில் பல வகைகள் உண்டு. பல மருந்துகள் பதிவுரிமை பெற்ற மருத்துவர்களால் பரிந்துரைக்கப் பட்டால்தான் மருந்துக் கடைகளில் பெற இயலும். சில வகையான தலைவலி, வயிற்றுவலி போன்ற எளிய நோய்களுக்கு (நோவுகளுக்கு), மருத்துவர் பரிந்துரை இல்லாமலே மருந்துக்கடைகளில் மருந்துகள் பெறலாம். மருந்தானது எவ்வாறு உடலுள் இயங்கி நோய்களையும், பிற குறைபாடுகளையும் தீர்க்கின்றது அல்லது கட்டுப்படுத்துகின்றது என்று ஆய்ந்தறியும் துறை மருந்தியல் ஆகும்.