பாப்லோ பிக்காசோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாப்லோ பிக்காசோ (ஒக்டோபர் 25, 1881 – ஏப்ரல் 8, 1973)) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.
பொருளடக்கம் |
[தொகு] காலப்பகுப்பு
பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.
நீலக்காலப்பகுதி (1901-1904), இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. ஸ்பெயினில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.
ஆபிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909), ஆபிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.
பகுப்பாய்வுக் கியூபிசம் (1909-1912), இது பிக்காசோவும், பிராக்கும் இணைந்து உருவாக்கிய ஓவியப் பாணியாகும். இந்த ஓவியங்கள் மண்ணிறத் தன்மை கொண்ட ஒரு நிற ஓவியங்களாக இருந்தன. இவ்வோவியங்களில் கருவாக அமைந்த பொருட்களை வடிவங்களின் அடிப்படையில் பிரித்தெடுத்து வரையும் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. இக்காலப் பகுதியில் இவ்விரு ஓவியர்களினதும் ஓவியங்கள் ஒன்றுபோலவே அமைந்திருந்தன.
[தொகு] தொடக்க காலம்
1881 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி, ஸ்பெயின் நாட்டிலுள்ள மலகா (Málaga) என்னுமிடத்தில், பெற்றோருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார்.