நாளிதழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன.
[தொகு] உள்ளடக்கம்
இவை அரசியல், வணிகம், குற்றம், பொழுதுபோக்கு, விளையாட்டு முதலிய இன்னோரன்ன துறைகள் சார்ந்த செய்திகளைத் தாங்கி வருகின்றன. தவிர நாளிதழ்கள் செய்திகள் அல்லாத வேறு பல அம்சங்களையும் கொண்டிருப்பது உண்டு. முக்கியமாக, ஆசிரியத் தலையங்கம், வாசகர் கடிதம், கேலிச் சித்திரங்கள், கதைகள், சோதிடம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
மேற்குறிப்பிட்டவை மக்களுக்குத் தகவல்களையும், பொழுதுபோக்கையும் வழங்கக்கூடிய அம்சங்களாகும். இவற்றுக்காகவே மக்கள் நாளேடுகளைப் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கிறார்கள். இதனால் இவ்வாறு மக்கள் விரும்பும் அம்சங்களை வழங்குவதற்காக நாளிதழ்களை வெளியிடும் நிறுவனங்கள் பெருமளவு பணத்தைச் செலவு செய்வதுண்டு. இவை தவிர நாளிதழ்களில் இடம்பெறும் சில அம்சங்களை வெளியிடுவதற்காக வெளியீட்டு நிறுவனங்கள் பணம் பெற்றுக் கொள்வதும் உண்டு. இவ்வாறான அம்சங்களில் முக்கியமானவை விளம்பரங்கள் ஆகும். இவற்றுள், உற்பத்திப் பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த விழையும் வணிக விளம்பரங்கள், வேலைக்கு ஆட்களைத் தேடும் விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பரங்கள், திருமண அறிவித்தல்கள், இறப்பு அறிவித்தல்கள் என்பன அடங்கும். அதிக விற்பனையைக் கொண்ட நாளிதழ்கள் விளம்பரங்கள் மூலம் நல்ல வருமானம் பெறுகின்றன.
பொதுவான நாளேடுகள் பல்வேறு வகையான வாசகர்களைக் கவர்வதற்காகத் தனியான அம்சங்களையும் வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கான பகுதி, மாணவர்களுக்கான பகுதி, சினிமாப் பகுதி, வேளாண்மை, கலை, விளையாட்டுப் பகுதி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
நாளிதழ்கள் வாசித்தபின் அன்றே எறிந்துவிடக் கூடியவை என்பதால், நாளிதழ்களைப் பதிப்பிக்கும் தாள்கள் உயர்ந்த தரமுள்ளைவையாக இருக்கவேண்டியதில்லை. இதனால் குறைந்த தரம் கொண்ட தாள்களிலேயே நாளிதழ்கள் அச்சடிக்கப்படுகின்றன. இத் தாள் பத்திரிகைத் தாள் எனப்படுகின்றது.