இலங்கையின் ஆதிவாசிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் ஆதிவாசிகள் எனப்படுவோர் வேடர்கள் அல்லது காட்டு வாசிகள் ஆவர்.
வெத்தா (சிங்களம்: "වැද්දා") என்பது வேடன் என்னும் பொருள் குறிக்கும் சிங்கள மொழிச் சொல். எனினும் சிறப்பாக, இலங்கையின் காட்டுப் பகுதிகளில் இன்னமும் சிறு தொகையினராக வசித்துவரும் இனத்தவரைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுகின்றது. தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களே. வெளியார் இவர்களை வேடர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) எனவே குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காட்டுப்பகுதிகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் பேசுகின்றார்கள்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்களே இயக்கர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர்.
ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம்.
[தொகு] மொழி
இவர்கள் ஆரம்பத்தில் என்ன மொழியைப் பேசினார்கள் என்பது தெரியவில்லை. இன்று இவர்கள் தாங்கள் வாழும் புகுதிகளில் வழங்கும் பெரும்பான்மை மொழிகளான சிங்களம் அல்லது தமிழைப் பேசிவருகிறார்கள்.
[தொகு] பண்பாடு
மற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள்.
[தொகு] வெளி இணைப்புக்கள்
A great deal of information on them can be found at Vedda.org